ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் 5 ஆண்டுகால விலை `சார்ட்' கற்றுத்தரும் பாடம்! நாள்-83

Greed & Fear என்ற இரண்டு உணர்வுகளும் இல்லாமல் பங்குச் சந்தை நகராது. #SmartInvestorIn100Days
முந்தைய அத்தியாயத்தில் பார்த்த இருவரில் ஒருவர் நஷ்டத்தை சந்தித்தார். மற்றொருவர் லாபத்தை தவறவிட்டார். அவர்களுக்கு அப்படி நேர என்ன காரணம்?
காரணம், அவர்களது உணர்வுதான்.
உணர்வு என்றால், பங்குச்சந்தை வியாபாரத்தில் முக்கியமாக இரண்டு உணர்வுகள். முதலாவது ஆசை. பங்குச்சந்தையில் பணம் பண்ண மக்கள் காட்டும் ஆசையை, பேராசை என்று வர்ணிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆங்கிலத்தில் ஃகிரீட் (Greed).
இரண்டாவது வலுவான உணர்வு, பயம். ஃபியர் (Fear). நஷ்டம் வந்துவிடுமோ என்கிற அச்சம்.
Greed & Fear என்ற இரண்டு உணர்வுகளும் இல்லாமல் பங்குச் சந்தை நகராது.
ஆனால், இவற்றில் ஏதோ ஒன்று மட்டும் இருப்பவர்கள் சிலர். இந்த உணர்வுகளில் ஏதோ ஒன்றிலோ, இரண்டிலுமோ கொஞ்சம் மட்டும் இருப்பவர்களும் உண்டு. நபருக்கு நபர், அளவுகள் வேறுபடும்.
இன்னும் இன்னும் என்று தொடர்ந்து இருப்பவர்கள், செய்பவர்கள், அதிக ஆசை உள்ளவர்கள். சாத்தியமில்லாதவற்றிலும் பணம் பண்ண முயற்சி செய்பவர்களும் அதிக ஆசை உள்ளவர்கள்தாம்.
எல்லாம் சரியாகப் போகையிலேயே, ஏதோ ஒன்று நடக்கப்போவதாக நினைத்து, `நஷ்டமானாலும் பரவாயில்லை’ என்று விற்பவர்கள் உண்டு. வெளியில் எது நடந்தாலும் அது பங்கு விலைகளைப் பாதிக்கும் என்கிற கோட்பாட்டை மனதில் வைத்து, சின்னச் சின்ன சலசலப்புகளுக்குக்கூட, கையில் இருப்பவற்றை விற்பவர்கள், செய்வது, அச்சம் என்ற உணர்வால்தான்.

இப்படிப்பட்ட வலுவான இரண்டு உணர்வுகளையும் தவிர்த்து, லாபம் பார்ப்பது, நஷ்டத்தைத் தவிர்ப்பது எப்படி?
இரண்டுக்கும் உதவக்கூடியது டெக்னிக்கல் அனாலிசிஸ்.
கோழி கூவினால், பொழுது விடியப்போகிறது என்று சொல்பவர்கள் இப்போதும் கிராமங்களில் உண்டுதானே. நகரங்களில் வாழ்ந்தாலும் நமக்கும் இது தெரியும். இது மிக எளிமையான உதாரணம். இப்படி பல இருக்கின்றன.
கோழி கூவிவிட்டால், கடிகாரம் பார்க்க வேண்டாம். நிச்சயம் விடிகாலை ஆகிவிட்டது என்று முடிவுக்கு வரலாம். அந்த இரண்டுக்குள்ளும், `அது நடந்தால், இது நடக்கும்’ என்பதுபோல ஓர் `உறவு’. மழை வரப்போவதற்கும் மயில் சிறகு விரித்து ஆடுவதற்கும், சில மிருகங்கள் குறிப்பிட்டவிதமாக சப்தம் செய்வதற்கும் என்று, இது போன்ற `அசோசியேஷன்’கள் இன்னும் பல இருக்கின்றன.
அப்படிப்பட்ட `இது நடந்தால், இது’ என்ற `அசோசியேஷன்’கள் பங்கு விலைகளிலும் உண்டு.

ஐந்தாவது மாடியில் ஒரு கதவு இருக்கிறது. அந்தக் கதவைத் தாண்டி, திருடனால் வரமுடியாது (என்று வைத்துக்கொள்வோம்). ஆனால், அதைத் தாண்டிவிட்டால் அவன் நான்காவது மற்றும் மூன்றாவது மாடிக்கு சுலபமாக வந்துவிடுவான்.
மூன்றாவது மாடியில் மற்றொரு கதவு இருக்கிறது. அது கொஞ்சம் தாங்கும். அதையும் உடைத்துவிட்டால், அவன் நிச்சயம் தரை தளத்துக்கு ஓடி வந்துவிடுவான்.
ஐந்தாவது மாடி என்பது ஒரு குறிப்பிட்ட அளவு விலை. பங்கின் விலை. அங்கிருந்து விலை ஏதாவது காரணத்துக்காக இறங்கினால், எவ்வளவு இறங்க முடியும்? நிறுவனத்தில் இருப்பவர்களுக்குத்தான் நிறுவனத்தின் குறிப்பிட்ட பிரச்னை பற்றி அதிகம் தெரியும். மற்றும் அந்த நிறுவனத்தின் புள்ளிவிவரங்களை, தகவல்களை ஆராய்கிற அனலிஸ்டுகளுக்கும் தெரியும். சாதாரண டிரேடர்களுக்கு அவற்றைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லை.
டிரேடர்கள் அந்தப் பங்கின் விலை இறங்குவதைப் பார்ப்பார்கள். ஏன் இறங்குகிறது என்ற காரணம் தெரியாது. அதனால் இறக்கம் எதுவரை போகக்கூடும் என்று அவர்களால் யூகிக்க முடியாது. ஆனால், அந்தப் பங்கின் விலை இறங்கி, கதவு அளவு வந்து விட்டது. இந்த இடத்தில் கதவு என்பது, அந்தப் பங்கின் `சப்போர்ட் விலை’ என்று சொல்லலாம்.

அதற்குக் கீழ் போவது கடினம். அப்படி நெருங்கும்போதே, `ஆகா! விலை இறங்கியிருக்கிறது' என்று வாங்குவதற்கு வேறு `பையர்ஸ்‘ வந்துவிடுவார்கள். அதனால், குறிப்பிட்ட விலை என்பது அந்தப் பங்குக்கு சப்போர்ட் விலையாக இருக்கும். பல சமயங்களில் சிறு சிறு பாதகமான செய்திகளுக்கு அந்தப் பங்கின் விலை இறங்கும். ஆனால், அந்த இடத்தில் இறங்குவது நின்றுவிடும். அதுதான் சப்போர்ட்.
ஆனால், சப்போர்ட் ஓரளவுக்குத்தான். பிரச்னை பெரிதாக இருந்தால், விற்பவர்கள் அதிகமாகி, அந்த விலைக்கு குறைவாகவும் விற்க முன்வருவார்கள். வாங்க வருபவர்களுக்கு தாராளமாக பங்குகள் கிடைக்கும். அப்படி நடந்தால், முதல் `சப்போர்ட்’ உடைகிறது என்று அர்த்தம். அந்தக் கதவைத் தள்ளித் திறந்துவிட்டால், நான்காவது மாடியில் வேறு `சப்போர்ட்’ (கதவு) இல்லை. தடையின்றி விலை மடமடவென்று இறங்கும்.
எது வரை இறங்கலாம்?
அடுத்த கதவு (சப்போர்ட்) இருக்கும் மூன்றாவது மாடி வரை. அங்கு வந்ததும் பெரிய அளவில் பையர்கள் வருவார்கள். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் 5 ஆண்டுக்கால விலை `சார்ட்’டைப் பார்த்தால் தெரியவரும். ரூபாய் 240 என்பது ஒரு நல்ல சப்போர்ட்.

நீண்டகால முதலீட்டாளராக இருக்கும் ஒருவர், அந்த விலைக்கு கீழ் போனால், விற்றுவிடலாம். அதன் பின் 184, 158 ரூபாயெல்லாம் கூட சீக்கிரமே வரக்கூடும். 240 ரூபாய் என்பது ஒரு கதவு.
மேலே சொல்லப்பட்டிருப்பது உதாரணம்தான்.
- முதல் போடலாம்
சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.