
செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்
இந்தியாவில் பிறந்த நவல் ரவிகாந்த் தற்போது அமெரிக்காவில் (சிலிகான் வேலி) ஒரு பிரசித்திபெற்ற ஏஞ்சல் இன்வெஸ்ட் டர். செல்வம் மற்றும் மகிழ்ச்சி குறித்த இவருடைய உரைகள், கட்டுரைகள், ட்வீட்டுகள் மற்றும் ட்வீட்ஸ்ட்ராம்கள் போன்றவை மிகவும் பிரபலமானவை. அவற்றைத் தொகுத்து எரிக் ஜோர்கன்சென் என்பவர் எழுதிய புத்தகத்தைதான் நாம் பார்க்கப்போகிறோம்.

‘‘பணம் சம்பாதிப்பது நீங்கள் செய்கிற ஒரு வேலை இல்லை. அது நீங்கள் கற்றுக்கொள்ளும் கலையாகும். செல்வந்தராவது எதைச் செய்ய வேண்டும், யாருடன் சேர்ந்து செய்ய வேண்டும் மற்றும் எப்போது செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதேயாகும். கஷ்டப்பட்டு உழைப்பது என்பதைவிட இந்த விதப் புரிதலே ஒருவரை செல்வந்தராக்கும். கஷ்டப்பட்டு உழைத்தல் என்பது தேவையானதே. ஆனால், மேலே சொன்ன மூன்று விஷயங்களை சரிவரப் புரிந்துகொள்ளாமல் வெறுமனே கஷ்டப்பட்டு உழைப்பது என்பது பெரிய அளவிலான பயனை உங்களுக்கு அளிக்காது. இது குறித்து சில கொள்கைகளை நான் 30 வருடங்களாக வகுத்து வைத்து அவற்றைத் தொடர்ந்து பின்பற்றிக்கொண்டிருக்கிறேன்’’ என்று சொல்கிறார் நவல் ரவிகாந்த்.
செல்வந்தராக ஆவது எப்படி?
‘‘பணத்தையோ, அந்தஸ்தையோ தேடாமல் செல்வத்தைத் (Wealth) தேடுங்கள். செல்வம் என்பது நீங்கள் தூங்கும்போது உங்களுக்காக பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கும். நம்முடைய நேரமும் செல்வமும்தான் பணமாக உருவெடுக்கிறது. அந்தஸ்து (status) என்பது நம்முடைய சமூகத்தில் நாம் இருக்கிற படிநிலையே ஆகும். நியாயமாக சம்பாதிப்பது இந்த உலகத்தில் சாத்தியமான ஒன்றுதான். இதற்கு எதிர்மறையான கருத்தை மனதில்கொண்டு நீங்கள் செல்வத்தை (அதை வைத்திருக்கும் செல்வந்தர்களையும்) வெறுத்தீர்கள் எனில், செல்வம் உங்களை விட்டு தப்பி ஓடிவிடும்’’ என எச்சரிக்கிறார் நவல் ரவிகாந்த்.

நேரத்தை வாடகைக்கு விட்டு...
‘‘உங்களுடைய நேரத்தை வாடகைக்கு விட்டு நீங்கள் ஒருபோதும் செல்வந்தராக ஆகவே முடியாது. அதனாலேயே உங்களுடைய மூளையை வைத்து நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்கிறேன். நேரம் என்பதை வாடகைக்குத் தருவது என்பது குறைந்த மதிப்பு கொண்ட ஒரு செயலாகவே எல்லா காலகட்டத்திலும் இருந்து வந்திருக்கிறது. அதனால், உங்களுடைய நேரத்தை உங்களுடைய வாழ்வின் மிகப் பெரிய முடிவுகளை எடுக்க மட்டுமே செலவிட வேண்டும்.
ஒரு மனிதனாக ஆரம்ப காலத்தில் எங்கே வசிப்பது, யாரோடு நட்பு / தொடர்பில் இருப்பது மற்றும் என்ன செய்வது என்ற மூன்று மட்டுமே நீங்கள் எடுக்க வேண்டிய மிகப் பெரிய முடிவுகளாக இருக்கும். செய்யும் தொழிலில் ஒரு பங்கு உங்களுக்கு இருக்க வேண்டும். அந்தப் பகுதி உரிமையே உங்களுக்கு நிதி சார்ந்த சுதந்திரத்தை வழங்கும். உறவு, அறிவு, செல்வம் என்ற அனைத்துமே நாள்பட பல்கிப் பெருகுகிற (compounding) விஷயங்களே ஆகும். எனவே, உங்களுடைய தொழிலில் பார்ட்னராக ஒருவரைத் தேர்வு செய்யும்போது, அறிவு, எனர்ஜி என்ற இரண்டும் அதிகமாக இருக்கும் நபராகத் தேர்வு செய்யுங்கள். இந்த இரண்டையும் தாண்டி அவர் அதீத நேர்மையுடையவராகவும் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் குறை கூறுபவரையும் (cynic), எல்லாவற்றிலும் அவநம்பிக்கை கொண்டவரையும் (pessimist) எக்காரணம் கொண்டும் பார்ட்னராகத் தேர்வு செய்யாதீர்கள்.
பணம் என்பது செல்வத்தில் இருந்து உருவாகும் ஒரு விஷயமே ஆகும். பணம் என்பது நாம் வாழ்கிற சமூகத்துடன் நாம் செய்யும் வரவு செலவுக்கானது. பணம் உங்களிடம் இருந்தால், நீங்கள் மற்றவர்களின் நேரத்தை உங்களுடைய காரியங்களுக்காகப் பெற முடியும். சமுதாயத்துக்கு உதவும் வகையிலான விஷயத்தை நான் செய்தால் சமுதாயம் எனக்கு நன்றியைச் சொல்லும். அது என்னுடைய தொழிலாக இருக்கும் போது அந்த நன்றியானது பணமாகச் செலுத்தப்பட்டு என்னை வந்தடைகிறது. வாடகைக்கு விடப்பட்ட சொந்த வீடும் செல்வமே. ஏனென்றால், அதுவும் பணத்தை நமக்குக் கொண்டு வருகிறது. ஆனால், ஒரு தொழில் செய்வதைவிட வீடு கட்டி வாடகைக்கு விடுவது குறைவான பணத்தையே கொண்டுவந்து சேர்க்கும்.
சமுதாயத்துக்குத் தேவைப்படும் பொருள்...
புதிதாக வரும் ஒரு தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருளின் நுகர்வானது உற்பத்தியை அதிகரிக் கிறது. உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் உங்கள் தெருவில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஏதாவது ஒரு நாள் புதிய டெக்னாலஜியின் மூலம் வந்ததாகவே இருக்கும். கச்சா எண்ணெய் புதிய டெக்னாலஜியாக இருந்த காலத்தில் ராக்பெல்லர் செல்வந்தரானார். கார்கள் புதிய டெக்னாலஜியாக உருவானபோது ஹென்றி ஃபோர்டு செல்வந்தரானார். ஒரு பொருளோ, சேவையோ நடைமுறைக்கு வந்து பெரு வாரியாகச் செயல்படுத்தப்பட்டுவிட்டால் அது டெக்னாலஜி என்ற நிலைமையில் இருந்து மாறிவிடுகிறது. ஆனால், சமுதாயத்துக்குத் தொடர்ந்து புதிய விஷயங்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எனவே, சமுதாயத்துக்குத் தேவைப்படும் உங்களுடைய தகுதிக்கும் திறனுக்கும் ஏற்றாற்போன்ற ஒரு விஷயத்தை உருவாக்கித் தர முயலுங்கள். அப்படி உருவாக்கப் பட்ட விஷயத்தை அதிக எண்ணிக்கையில் (scale up) விற்க முயலுங்கள்.
தொழில் போட்டி வந்தால்...
தொழிலில் போட்டி வந்தால் என்ன செய்வது? உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை அசலாக (Authentic) இருக்கச் செய்யுங்கள். அசலாக இருப்பதன் மூலம் எப்பேர்ப்பட்ட போட்டியையும் எளிதில் சமாளிக்க முடியும். மற்ற நிறுவனங்களைப்போல் காப்பி அடிக்க முயலவே முயலாதீர்கள். நியாயமாக நடந்துகொள்வதும் போட்டியைச் சமாளிக்க நிச்சயம் உதவியாக இருக்கும். நியாயமாக நடப்பது கடின மானதாகும். ஆனால், நியாயமாக நடப்பதன் மூலம் போட்டியை எளிதில் சமாளிக்க முடியும்.
எப்போது ஓய்வு பெறுவது..?
சரி, எப்போது ஓய்வு பெறுவது? ரிடையர்ட்மென்ட் என்பது கற்பனையில் இருக்கும் எதிர்காலத்துக்காக இன்றைய தினத்தை தியாகம் செய்வதை நிறுத்துவதே ஆகும். இன்றைய தினம் இன்றைய தினத்துக்காக வாழப்படும் நாளே ரிடையர்மென்ட் ஆகும்.
ரிடையர்மென்ட் என்ற நிலையை மூன்று விதங்களாக குறிப்பிடலாம். 1. நீங்கள் உங்களுடைய அன்றாட செலவுகளுக்குத் தேவையான அளவிலான பேசிவ் இன்கம்மை (உங்களுடைய அன்றாட தலையீடு ஏதும் இல்லாமல் அதுவாகவே உருவாகும் வருமானம்) பெறுகிற நிலைமையை எட்ட வேண்டும். 2. நீங்கள் உங்களுக் காக செலவே செய்ய வேண் டாத நிலையை அடைய வேண்டும். 3. உங்களுக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் – பணத்துக்காக அல்லாமல். இந்த மூன்றில் எந்த ஒரு விஷயத்தை நீங்கள் எட்டி விட்டாலுமே நீங்கள் வெற்றிகரமாக ரிடையர் ஆகிவிட்டீர்கள் எனலாம்.
அதிர்ஷ்டம் என்றால் என்ன?
‘‘அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். அதிர்ஷ்டம் உங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதிர்ஷ்டத்தின் மீது நீங்கள் தடுக்கி விழும்வரை நீங்கள் பரபரப்பாக ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். அதிர்ஷ்டத்தைப் பெற மற்றவர்கள் தவறவிடுகிற வாய்ப்புகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அளவுக்கான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதில் கைதேர்ந்தவராக உருவெடுக்க வேண்டும். அப்படி நீங்கள் உங்களைத் தொடர்ந்து முன்னேற்றம் அடையச் செய்து தகுதிப் படுத்திக்கொள்ளும்போது வாய்ப்பு என்பது உங்களைத் தேடிவரும். அதிர்ஷ்டம் என்பது உங்களுடன் சேர்ந்திருக்கும்.’’
மகிழ்ச்சியுடன் வாழ்தல்...
மகிழ்ச்சியுடன் வாழ்வ தென்பது பரம்பரையாக நாம் பெறுகிற சொத்து அல்ல. இது ஒரு தனி மனித குணாதி சியம். ஃபிட்னஸ் மற்றும் டயட் (நியூட்ரிஷன்) போல் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விஷயமே மகிழ்ச்சியுடன் வாழ்தல் என்பதும். ‘இது என்னுடைய வாழ்வில் இல்லை’ என்ற எண்ணம் இல்லாமல், இருக்கும் நிலையையே மகிழ்வான நிலை என்கிறோம். உதாரணமாக, நம் குழந்தைகள் வாழ்கிற ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியுடன் முழு ஈடுபாட்டுடன் (எதிர்காலம் குறித்த கவலைகள் ஏதுமின்றி) வாழ்வதைப் பாருங்கள். அதுபோல், நீங்கள் இருப்பதுதான் மகிழ்ச்சியான நிலையாகும். மகிழ்ச்சி, அன்பு மற்றும் பேரார்வம் என்பவை எல்லாம் நீங்கள் கண்டுபிடிக்கும் விஷயங்கள் இல்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
சரி, வெற்றி என்பது மகிழ்ச்சியைத் தருமா என்று கேட்டால், அதுவும் இல்லை என்றே சொல்ல வேண் டும். ஏனென்றால், மகிழ்ச்சி என்பது கையில் இருப்பதே போதும் என்று நினைத்து வாழ்வதில் இருக்கிறது. ஆனால், வெற்றியோ இது போதாது, இது போதாது என்ற எண்ணம் கொண்டிருந்தால் மட்டுமே கிடைப்பது. எனவே, வெற்றியா, மகிழ்ச்சியா என்று தேர்வு செய்துகொள்ள வேண்டியதுநீங்கள்தான்.
நீங்கள் நீங்களாகவே ஏன் வாழ வேண்டும், மனித வாழ்வின் அர்த்தம் என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அர்த்தம் பொதிந்த கருத்துகளை சொல்கிறது இந்தப் புத்தகம். ‘‘இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபின் உங்களுக்குள் மிகப் பெரிய உத்வேகம் பிறக்கும். உத்வேகம் விரைவில் அழியும் தன்மை கொண்டது. எனவே, புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் கிடைக்கும் உத்வேகம் முழுமையாக உங்களி டம் இருக்கும்போதே வாழ்வில் செல்வத் தையும் மகிழ்ச்சியையும் பெருக்கும் நடவடிக்கை களைத் தொடங்கி விடுங்கள்’’ என்று சொல்லி முடிகிறது இந்தப் புத்தகம்.
பணம் சேர்க்க நினைக்கும் அனைவரும் இந்தப் புத்தகத்தை அனைவரும் கட்டாயம் ஒரு முறை படித்து சிறந்த பயனைப் பெறலாம்!