திருமுல்லைவாயல் பகுதியில் 4 வயதுச் சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக முன்னாள் ராணுவ வீரர் சுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக சுந்தரத்தின் மனைவி ராஜம்மாளும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் திருமுல்லைவாயல் அந்தோணி நகர், நாகம்மை நகர் பகுதி மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். சிறுமியைக் கொலை செய்தவருக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் எனத் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அடுத்து சாலையில் அமர்ந்து `நீதி வேண்டும் நீதி வேண்டும்' என்று பொதுமக்கள் கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீஸார் சமரசப்படுத்தினர். இதனால் போராட்டத்தைப் பொதுமக்கள் கைவிட்டனர்.
இதுகுறித்து அந்தோணி நகர் பொதுமக்கள் கூறுகையில், ``சுந்தரத்தின் சொந்த ஊர் ராஜபாளையம். ராணுவத்திலிருந்து 1993-ம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், அரசு அலுவலகத்தில் காவலாளியாகப் பணியாற்றினார். அந்த வேலையிலிருந்தும் அவர் ஓய்வு பெற்ற பிறகு, வீட்டில் இருந்தார். அவரின் வீட்டில் குடியிருந்த பெண்ணுக்கு சுந்தரத்தால் தொந்தரவு ஏற்பட்டது. அதனால் அந்தக் குடும்பம் வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு இடத்துக்குச் சென்றுவிட்டார். அடுத்து அந்தோணி நகரில் குடியிருக்கும் ஒரு பெண்ணும் சுந்தரத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இது தவிர மின்சார ரயிலில் பெண்கள் பயணிக்கும் பெட்டியில் சுந்தரம் பயணித்ததாகவும் தகவல் உள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் காவல் நிலையத்தில் புகாராகப் பதிவு செய்யப்படவில்லை.
4 வயதுச் சிறுமியிடம் சுந்தரம் தவறாக நடந்த பிறகு, தன்னைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகச் சிறுமியை அவர் கொலை செய்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். சிறுமியைக் காணவில்லை என்று சுந்தரத்தின் மனைவி ராஜம்மாளிடம் நாங்கள் கேட்டபோது அவர் பார்க்கவில்லை என்று கூறினார். ஆனால், கொலை நடந்த பிறகு தடயங்களை அழித்து கணவரைக் காப்பாற்ற ராஜம்மாள் உறுதுணையாக இருந்ததாக போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
சட்டத்தின்படி சுந்தரத்துக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். இவரைப் போன்றவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. சுந்தரத்துக்காக எந்த வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜாராகக் கூடாது. சுந்தரத்துக்கும் ராஜம்மாளுக்கும் கிடைக்கும் தண்டனை மற்றவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும்" என்றனர் ஆத்திரத்துடன்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சுந்தரத்தின் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். சிறுமி எப்படிக் கொலை செய்யப்பட்டார் என்ற கேள்வியை சுந்தரத்திடம் கேட்டபோது அவர் எந்தவித பதிலும் சொல்லாமல் தலையைக் கீழே குனிந்தபடி அமைதியாகவே இருந்தார். ஆனால், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளும் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததற்கான காயங்களும் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சுந்தரத்தின் வீட்டின் படுக்கையறையிலிருந்து கம்மல், உடைந்த வளையல்கள், ரத்தக்கறை படிந்த துணி ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். மேலும், சிறுமியின் சடலம் இருந்த 25 கிலோ அரிசி சாக்கு சுந்தரத்தின் வீட்டிலிருந்துதான் கொண்டு வரப்பட்டதற்கான தகவல் கிடைத்துள்ளது.
சுந்தரத்தை நாங்கள் பிடிக்கச் சென்றபோது அவர் தப்பி ஓட முயன்றார். இதில் அவரின் கை முறிந்தது. உடனடியாக அவருக்கு கை முறிவுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். நீதிமன்றத்தில் சுந்தரத்தையும் அவரின் மனைவி ராஜம்மாளையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சிறுமியின் சடலம் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் சடலத்தைப் பார்த்து பெற்றோரும் உறவினர்களும் அந்தோணி நகர் பகுதி மக்களும் கதறி அழுதனர். அதன்பிறகு, நேற்று மாலை சிறுமிக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
திருமுல்லைவாயல் காவல் நிலையம் அருகில் நடந்த இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.