தொடர் கதையாகும் விபத்துகள்
##~## |
ஒகேனக்கல் என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தினால், 'புகையும் கல்’ என்று சொல்லலாம். உயரமான அருவியில் இருந்து விழும் தண்ணீர், நீர்ப் புகையாகப் பரவி அனைவரையும் ஆனந்தப்படுத்துகிறது. சகலருக்கும் சந்தோஷம் தரும் ஒகேனக்கல், அவ்வப்போது துக்கத்திலும் ஆழ்த்தி விடுவ துதான் வேதனை!
கடந்த 18-ம் தேதி, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் இருந்து 20 பேர் கொண்ட குழுவினர், இங்கு சுற்றுலா வந்தனர். பரிசல் சவாரி, அருவிக் குளியல், மீன் வறுவல் என ஆனந்தமாக களித்திருக்கிறார்கள். அதில் சிலம்பரசன், ஜஷ்வந்த் குமார், அருண், தினேஷ்குமார் ஆகிய நால்வர் மட்டும் தனியாகப் பிரிந்து காவிரி ஆற்றில் குளிக்கப் போனார்கள். விவரம் தெரியாமல், ஆழமும் சுழலும் அதிகமாக இருக்கும் பகுதியில் இறங்கிக் குளித்து இருக் கின்றனர். திடீரென ஒருவர் சுழலில் சிக்கிக்கொள்ள...மற்ற மூவரும் பதறிப்போய் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்க, ஒருவர் பின் ஒருவராக சுழலில் சிக்கி நான்கு பேருமே இறந்து போனார்கள்.


இதுபோன்ற விபத்து ஒகேனக்கலுக்குப் புதிது அல்ல. அவ்வப்போது உயிர்ப்பலி நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனாலும், நிலைமையைச் சமாளிக்க, இங்கே அவசர உதவிக் கட்டமைப்புகள் எதுவுமே இல்லை.
இதுகுறித்து நம்மிடம் பேசினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒகேனக்கல் கிளைச் செயலாளரான மாரிமுத்து. ''அருவியுடன் கூடிய தமிழக சுற்றுலாப் பிரதேசங்களில் ஒகேனக்கல்தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. போக்குவரத்து வசதி இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கிறார்கள். இனிமை தேடிவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விபத்து, அசம்பாவிதம், ஆபத்து போன்றவை நேராமல் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை.
ஆபத்துப் பகுதிகளை சுட்டிக்காட்டும் வகையில் எச்சரிக்கை போர்டுகளை வைத்து முறையாகப்

பராமரிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட இடத்தில் யாரும் நுழைந்து விடாதபடி போலீஸ் மூலம் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். பரிசல் பயணம் மிகமிக ஆபத்தானது என்பதை யாருமே உணர்வது இல்லை. ஏனென்றால், பரிசலில் செல்லும் யாருமே உயிர் காக் கும் 'லைஃப் ஜாக்கெட்’ அணிவதே இல்லை. மேலும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான கழிவறை வசதி இல்லை இல்லாத காரணத்தால் இயற்கை உபா தையைத் தணித்துக்கொள்ள, ஆள்அரவம் இல்லாத பகுதிக்குத்தான் ஒதுங்க வேண்டி இருக்கிறது. அங்கே ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கும்போது விபத்து நடந்து விடுகிறது. இதையெல்லாம்விட கொடுமையான விஷயம், இத்தனை மக்கள் வந்துபோகும் இடத்தில் ஒரு மருத்துவமனை கூட கிடையாது. துணை சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு நர்ஸ் மட்டும், அதுவும் கொஞ்ச நேரம் மட்டுமே இருக்கிறார். அதனால், எந்த ஒரு விபத்து நடந்தாலும், 16 கி.மீ. தூரத்தில் இருக்கும் பென்னாகரத்துக்கோ அல்லது 50 கி.மீ. தூரத்தில் இருக்கும் தர்மபுரிக்கோதான் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த கால விரயம் காரணமாகவே பல உயிர்களை இழக்க வேண்டி உள்ளது.
அருவியில் குளிக்கும் சிலருக்கு, அதிவேகமாக விழும் தண்ணீர் காரணமாக திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு உண்டு. போன மாதம்கூட ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, பென்னாகரம் கொண்டு செல்வதற்குள் இறந்து விட்டார். அதனால், 24 மணி நேரமும் செயல்படும் விதமாக நிரந்தர

மருத்துவமனை இங்கே உடனே திறக்க வேண்டும். ஆபத்துக் காலங்களில் விரைவாக மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு வசதியாக இயந்திரப் படகுகள் வேண்டும்.
இதுபோன்ற அடிப்படைத் தேவைகள் எதுவுமே இல்லாத காரணத்தால்தான், ஒகேனக்கலில் அவ்வப்போது அழுகைக் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இத்தனை குறைகள் இருந்தாலும் அதிகாரிகள் இங்கே பாதுகாப்பு நடவடிக்கை எது வுமே எடுப்பது இல்லை. இத்தனை அலட்சியம் காட்டுவது நியாயம்தானா? எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய முடியவில்லை என்றால் ஒகேனக்கல் அருவிப் பகுதிக்குள் மக்கள் நுழையத் தடைவிதித்து விடலாம். ஆசை காட்டி அழைத்து உயிரைப் பறிக்கும் கொடூரத் தைத்தான் அரசு செய்கிறது'' என்று ஆத்திரப்பட்டார்.
இது குறித்து தர்மபுரி மாவட்டக் கலெக்டர் லில்லியிடம் கேட்டோம். ''ஆபத்தான இடங்களை அடையாளம் காட்டும் எச்சரிக்கை போர்டுகளை விரைவில் வைக்க இருக்கிறோம். சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க காவலர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இருக்கிறது. ஆனால், பலர் அவர்களை ஏமாற்றிச் செல்ல நினைத்து, ஆபத்தைச் சந்திக்கிறார்கள். மருத்துவ வசதி கிடைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். டாய்லெட் வசதி செய்து தருவதற்கு வனத் துறையின் அனுமதி வேண்டும். இயந்திரப் படகு, லைஃப் ஜாக்கெட் போன்ற விவகாரங்களையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம்'' என்று சொன்னார்.
இனியாவது, விபத்து இல்லாத பகுதியாக மாறட்டும் ஒகேனக்கல்!
- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்