ஜூ.வி. நூலகம்
##~## |
சிட்டுக்குருவிகளைக் காணவில்லை. ஏன்?
செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போனது என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அது உண்மையா? இல்லை என்று சொல்லும் இந்தப் புத்தகம், அதற்கான உண்மையான காரணத்தைப் பட்டியல் போடுகிறது.
'மனிதர்களின் நாகரிக வளர்ச்சி, நவீன அறிவியல் தொழில்நுட்பம்தான் சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணம் என்று பிரிட்டன் ஆய்வுகள் சொல்கின்றன. குருவிகளின் அழிவுக்கு அவை குறிப்பிடும் ஒரு காரணம் மட்டுமே செல்போன் அலைகள். ஆனால், அதைவிட முக்கியமான காரணம் பசுமைப் பரப்பு குறைந்ததே’ என்கிறார் ஆதி வள்ளியப்பன். மேலும், பூச்சிக்கொல்லிகள், அயல் தாவரங்கள் பெருகிவிட்டதன் காரணமாக, குருவிக் குஞ்சுகளுக்கு முக்கிய உணவாக புழு, பூச்சிகள் கிடைப்பது இல்லை; நவீன கட்டடங்களில் குருவிகள் கூடு அமைக்க வசதி இல்லை; வேலிப் புதர்களுக்குப் பதிலாக இப்போதெல்லாம் இரும்பு வேலிகள் போடப்படுகின்றன; உணவுக்கும் இருப்பிடத்துக்கும் சிட்டுக்குருவிகளுடன் புறாக்கள், மைனாக்கள் போட்டியிடுகின்றன; ஓய்வெடுப்பதற்கு புதர்ச் செடிகள் இல்லை... என்று வரிசையாக பட்டியலிடுகிறார்.

இப்படித்தான், ஒரு காலத்தில் குறிப்பிட்ட பல பகுதிகளில் இருந்த கானமயில் குறைந்துகொண்டே வருகிறது. வானத்தில் வட்டமிடும் பிணந்தின்னிக் கழுகுகளும் குறைந்து வருகிறது. பல அரிய பறவை இனங்கள் ஒவ்வொன்றாக குறைந்தும் அழிந்தும் வருவது சுற்றுச்சூழலுக்கு கேடானது.
சிட்டுக்குருவி எனது மனதுக்கு நெருக்கமான பறவை. மனிதர்களால் வீட்டு விலங்காக மாற்றப்பட்ட உயிரினங்களில் ஒன்று. அணில், காக்கை, குருவி, சிலந்தி, பல்லி, எறும்பு ஆகியவை, வாழ உகந்த சூழ்நிலை உள்ள வீடுகளுக்குள் வந்துவிடும். 'மனிதனின் உதவியுடன் உலகம் முழுக்க பரவிய பறவை ஒன்று உண்டென்றால் அது சிட்டுக்குருவி. இது இப்படி வெற்றிகரமாகப் பரவியதற்குக் காரணம் மனிதரை அண்டி வாழும் பண்புதான். இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு பறவையை எடுத்துக்காட்டுக்குச் சுட்டுவதென்றால், முதலில் குருவியையே அனைவரும் சொல்வார்கள்’ என்று அன்பு உணர்வோடு அடையாளப்படுத்தப்படும் சிட்டுக்குருவிகளைப் பற்றிய நுணுக்கமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் அழகிய படங்களுடன் இருக்கின்றன.
சிட்டுக்குருவிகளை பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதற்கும் ஆதி வள்ளியப்பன் பட்டியல் கொடுக்கிறார். ஆல், அரசு மாதிரியான மரங்கள், அவரை, புடலை மாதிரியான கொடிகளை வளர்க்க வேண்டும். குறிப்பாக, வேலியோர தாவரங்களை வளர்க்க வேண்டும். தோட்டங்களில் வேதி உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். சிட்டுக்குருவிகளுக்கு தானியங்களை உணவாக வைக்க வேண்டும். வெயில் காலத்தில் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்.
இவை எல்லாம் ஏதோ சிட்டுக்குருவிகளின் நன்மைக்காக மட்டும் அல்ல. நமக்காகவும்தான். பறவையியல் அறிஞர் சலீம் அலி சொன்னார், 'இந்த உலகில் மனிதர்கள் இன்றி பறவைகள் வாழ முடியும். ஆனால், பறவைகள் இன்றி மனிதர்கள் வாழ முடியாது’.
- புத்தகன்