சென்னை, அடையாறு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 11 வயது சிறுமிக்கு, 43 வயதாகும் நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துவந்தார். இது குறித்து 2021-ம் ஆண்டு அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார் பாலியல் தொல்லை கொடுத்தவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை, சாட்சிகளை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கு நடவடிக்கைகளைத் தொடர்ந்து போலீஸார் கண்காணித்துவந்தனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து கடந்த 16-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. `அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்திய அடையாறு அனைத்து மகளிர் போலீஸாரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.