நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்தவர் முகமது கனி. 60 வயதான இவர், குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அருகில் இவரின் உறவினர்கள் நடத்திவரும் முத்திரைத்தாள் விற்பனைக் கடையில் எழுத்தராக இருந்துவந்திருக்கிறார். இன்று மதியம் வழக்கமான வழிபாட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் கடைக்கு மகனுடன் சாலையோரம் நடந்து சென்றிருக்கிறார்.
அப்போது திடீரென கால் இடறி அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தின் சக்கரத்தில் விழுந்திருக்கிறார் முகமது கனி. பேருந்தை ஓட்டுநர் நிறுத்த முயன்றும், முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சக்கரம் இவரின் தலைமீது ஏறியதில் தலை சிதறி நிகழ்விடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

நொடிப்பொழுதில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைப் பார்த்த முகமது கனியின் மகனும், அக்கம் பக்கத்தின்ரும் அவரைக் காப்பாற்ற முயன்றும் பயனில்லை. முகமது கனியின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.