கன்னியாகுமரி மாவட்டம், பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷனராகப் பணியாற்றி, தற்போது ஓய்வுபெற்றிருக்கும் இவர், தன் மகனுக்கு வேலை தேடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவருடைய நண்பர் டேவிட்சனிடம் இது குறித்து தெரிவித்திருக்கிறார். டேவிட்சனோ, தனக்குப் பழக்கமான குமரய்யாவை அணுகுங்கள் என்று கூறி அவர் போன் நம்பரைக் கொடுத்திருக்கிறார்.
எனவே, செல்லத்துரை அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசியபோது, 'நான் விழுப்புரத்தில் வேலை செய்கிறேன்' என குமரய்யா (தற்போது தற்காலிகப் பணி நீக்கத்தில் இருக்கிறார்) கூறினாராம். அதைத் தொடர்ந்து, செல்லத்துர விழுப்புரம் வந்து குமரய்யாவிடம் பேசியபோது, "நான் ஒரு போலீஸ் அதிகாரி. முதலமைச்சர் பாதுகாப்புப்படையில் இருக்கிறேன்.

எனவே முதலமைச்சர், அமைச்சர்கள், அவர்களின் செயலாளர்களிடம் நேரடியாகப் பேசி உங்கள் மகனுக்கு ஆவின் பொறியாளர் வேலை வாங்கித் தந்துவிடலாம். அதற்கு 35,00,000 ரூபாய் வரையில் செலவாகும்" என்று கூறி அவரிடம் பணம் பெற்றிருக்கிறார்.
அதேபோல செல்லத்துரையின் ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர் என மொத்தம் மூன்று பேரிடம் சேர்த்து 51,00,000 ரூபாயை குமரய்யா பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் போக்கு காட்டி வந்திருக்கிறார்.
இந்த நிலையில், குமரய்யா தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டதாக செல்லத்துரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அண்மையில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் நேற்று மாலை குமரய்யாவைக் கைதுசெய்தனர்.