திருச்சி பாலக்கரை காஜாபேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் சையது உசேன் (வயது 46). நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் இவரின் வீட்டின் முன்பு நாய் ஒன்று ஓயாமல் குரைத்துக்கொண்டிருந்திருக்கிறது. அவர் பலமுறை விரட்டியும் நாய் போகாததால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சையது உசேன், தன்னுடைய வீட்டிலிருந்த பிஸ்டல் துப்பாக்கியை எடுத்து நாயைச் சுட்டிருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே நாய் சுருண்டு விழுந்து இறந்துபோனது. இது குறித்து அவரின் வீட்டருகே வசித்துவரும் பிரபு பழனியப்பன் என்பவர் பாலக்கரை போலீஸில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரில், "சையது உசேன் இதேபோல பல நாய்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். புறாக்கள் போன்றவற்றுக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்து கொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் சம்பவத்தன்று தெருவில் பசியில் கத்திக்கொண்டிருந்த குட்டி நாய் ஒன்றுக்கு பிஸ்கட் போட்டுக்கொண்டிருந்தேன். பிஸ்கட் போட்டுவிட்டுத் திரும்பும்போது 'டப்' என்ற சத்தம் கேட்டது.
என்னவென்று பார்த்தபோது மாடியில் நின்றுகொண்டிருந்த சையது உசேன் கையில் துப்பாக்கியிருந்தது. நாயின் கழுத்தில் தோட்டா பாய்ந்து ரத்தம் பீரிட்டு வந்தது. பாவம்ங்க... அந்த நாய்க்குட்டி. தயவுசெய்து சையது உசேன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீஸார், விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம், அனுமதி இன்றி ஆயுதங்கள் வைத்திருத்தல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து சையது உசேனிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், அவர் பயன்படுத்திய ஏர்கன் பிஸ்டலையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.