தேனி பூதிப்புரம் அருகேயுள்ள வீருசின்னம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் டெய்லராகப் பணியாற்றிவருகிறார். இவருடைய மகன் கமலேஸ்வரன் (18) நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் தேர்ச்சிபெற்றிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து தன்னுடைய டூ வீலரில் சென்ற கமலேஸ்வரன், இரவு வீட்டுக்குத் திரும்பவில்லை. மறுநாளும் அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. தந்தை சரவணனும் திருப்பூரில் இருப்பதால், கமலேஸ்வரனின் தாய்மாமன் நாகரத்தினம், பழனிச்செட்டிபட்டி போலீஸாரிடம் புகாரளித்தார்.

அதனடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். அதில் பூதிப்புரம் கல்லூரணி கரடு அருகே தனியாருக்குச் சொந்தமான நிலத்திலுள்ள கிணற்றுக்கு அருகே இரண்டு நாள்களாக ஒரு டூ வீலர் நிற்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. பழனிச்செட்டிபட்டி போலீஸார் அந்தப் பகுதியில் தேடிப் பார்த்தபோது, கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. புகாரளித்த நாகரத்தினத்தை அழைத்து வந்து காட்டியபோது, இறந்துகிடப்பது கமலேஸ்வரன்தான் எனவும், அந்த வாகனம் கமலேஸ்வரனுடையது எனவும் அடையாளம் காண்பித்திருக்கிறார். உடலை மீட்ட போலீஸார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இது குறித்து கொலை வழக்கு பதிவுசெய்த பழனிச்செட்டிபட்டி போலீஸார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த கமலேஸ்வரன், பள்ளி மாணவி ஒருவரைக் காதலித்துவந்ததாகவும், அதை அறிந்த மாணவியின் பெற்றோர் அவரைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

காதல் விவகாரத்தில் தன்னுடைய மகன் கொலைசெய்யப்பட்டிருக்காலம் என கமலேஸ்வரனின் தாய் ஊஞ்சாலம்மள் அளித்த புகாரில், பழனிச்செட்டிபட்டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.