ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆகிய நாடுகளில் வறுமை, மோதல்போக்கு அதிகரித்துவருகிறது. இதனால் அந்த நாட்டைச் சேர்ந்த மக்கள், கடல் மார்க்கமாக ஐரோப்பா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்கின்றனர். இந்த நிலையில், வட ஆப்பிரிக்க நாட்டின் துனிசியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மக்கள் குழுக்களாகப் படகுகளில், இத்தாலிக்கு கடல் வழியாகச் சென்றிருக்கின்றனர். அப்போது மத்தியத் தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்குச் செல்ல முயன்ற புலம்பெயர்ந்த மக்கள் சென்ற படகுகள் மஹ்தியா கடல்பகுதியில் காணவில்லை என துனிசிய கடற்கரை கடலோரக் காவல்படையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

உடனே குறிப்பிட்ட பகுதிக்குச் சென்ற கடற்படை வீரர்கள் 53 பேரை மீட்டனர், அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். இது குறித்து பேசிய தேசிய பாதுகாப்பு அதிகாரி ஹவுசெம் ஜெபாப்லி (Houssem Jebabli), "துனிசியா நாட்டிலிருந்து இத்தாலிக்குப் படகுகளில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்து புறப்பட்டனர். அப்போது அதிக காற்று வீசியதால் அவர்கள் சென்ற படகுகள் கடலில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. ஆனால், இது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. மேலும் பலரைக் காணவில்லை. மாயமானவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டிருக்கின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.