திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜமீலா பானு (40). திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். இவருடைய மகள் நிஷா (21). இவர் சேலம் அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். திருப்பூர் குமரன் சாலையிலுள்ள தன்னுடைய அலுவலகத்தில் ஜமீலா பானு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி, அவர் மகள் நிஷாவுடன் இருந்திருக்கிறார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், ஜமீலா பானு, நிஷா ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில், படுகாயமடைந்தனர்.

இந்தத் தகவலறிந்து வந்த போலீஸார் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜமீலா பானு, அவருடைய மகள் நிஷா இருவரையும் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், சேலத்தில் நிஷா படிக்கும் அரசு சட்டக் கல்லூரியில் ஏற்கெனவே படித்த திருப்பூர், பெரியதோட்டம் பகுதியைச் சேர்ந்த ரகுமான் கான் (25), நிஷாவிடம் தன்னைக் காதலிக்குமாறு தொல்லை கொடுத்துவந்திருக்கிறார்.
இது தொடர்பாக சேலம் கொண்டாலம்பட்டி காவல் நிலையத்தில் ரகுமான் கான் மீது நிஷா புகாரளித்தார். அந்தப் புகாரின்பேரில், போலீஸார் ரகுமான் கானைக் கைதுசெய்தனர். இந்தக் கொலை முயற்சி நடப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த ரகுமான் கான், ஆத்திரத்தில் நிஷா, அவருடைய தாய் ஜமீலா பானு ஆகியோரை கத்தியால் வெட்டிக் கொலைசெய்ய முயன்றது தெரியவந்தது.

இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிவுசெய்து, கேரளத்தில் பதுங்கியிருந்த ரகுமான் கானைக் கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து, செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர் ஜமீலா பானு, அவருடைய மகளை அரிவாளால் வெட்டிக் கொலைசெய்ய முயற்சி செய்ததற்காக ரகுமான் கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டும் நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.