மும்பை கடலில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிணறு இருக்கிறது. இந்த எண்ணெய்க் கிணறு இருக்கும் இடத்துக்கு அருகில் மற்ற படகுகள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதி 24 மணி நேரமும் கடற்படையின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பை கடலில் வீசிய கடுமையான காற்று காரணமாக ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் கிணறு அருகில் நிறுத்தப்பட்டிருந்த படகு விபத்துக்குள்ளானது. இந்த நிலையில்தான் ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் கிணறு அருகில் திடீரென நேற்று மீன்பிடி படகு ஒன்று அத்துமீறி நுழைந்தது. உடனே அந்தப் படகுக்கு அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைப் படகில் இருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

அப்படியிருந்தும் அந்தப் படகு ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் கிணறு அருகில் அத்துமீறி நுழைந்தது. இதனால் கடற்படையினர் அந்தப் படகைச் சுற்றிவளைத்து உள்ளே இருந்த 15 பேரைக் கரைக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் படகில் இருந்தவர்களில் இரண்டு பேர் பாகிஸ்தானியர்கள் என்று ஒருவர் தெரிவித்தார். அதோடு ஒருவர் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூற மறுத்தார்.
விசாரணையில் இரண்டு பேர் பாகிஸ்தானியர்கள் என்று சொன்ன தகவல் பொய் என்று தெரியவந்தது. கடற்படைக்குத் தவறான தகவல் கொடுத்ததாக, படகை ஓட்டியவர் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அவர்கள் போலீஸில் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். மும்பை கடற்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் வரும் அனைத்துப் படகுகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. ஏற்கெனவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் படகில் வந்து மும்பையில் தாக்குதல் நடத்தியது உலக அளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.