சமூக வலைதளங்களில் யூடியூபர் பப்ஜி மதனின் ஆபாச பேச்சுக்கள்தான் டிரெண்டிங்கில் இருந்துவந்தன. யார் இந்த பப்ஜி மதன் என்ற கேள்விகளோடு, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் தமிழக காவல்துறைக்கு புகார்களை அனுப்பிவந்தனர். சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் வேல்முருகன் ஆகியோர் மேற்பார்வையில் சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், யூடியூபர் பப்ஜி மதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தார். விசாரணையில், மதனின் யூடியூப் சேனலின் நிர்வாகியாக மதனின் மனைவி கிருத்திகா இருப்பது தெரியவந்தது. அதனால் கிருத்திகாவை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக இருந்த மதனை போலீஸார் தேடிவந்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மதனை விரைவில் பிடித்துவிடுவோம் என நேற்று பேட்டியளித்திருந்தார். இந்தச் சமயத்தில்தான் மதன், தருமபுரியிலுள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் சைபர் க்ரைம் பிரிவு போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீஸார் தருமபுரிக்குச் சென்றனர். அங்கு ஓட்டு வீட்டில் பதுங்கியிருந்த மதனை போலீஸார் பிடித்தனர். அப்போது அவர், `சிறுவர்களிடம் ஆபாசமாகப் பேசி, அவர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றது தவறுதான், என்னை மன்னித்துவிடுங்கள் சார், இனிமேல் அப்படியொரு தவறு செய்ய மாட்டேன்’ எனக் காலில் விழுந்து கெஞ்சியிருக்கிறார். ஆனாலும் போலீஸார் மதனைப் பிடித்தனர்.
மதனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து நம்மிடம் பேசிய சென்னை மத்திய குற்றப்பிரிவின் உயரதிகாரி ஒருவர், `மதனின் சொந்த ஊர் சேலம் டவுன். இவரின் அப்பா மாணிக்கம், ஒப்பந்தகாராகப் பணியாற்றிவந்திருக்கிறார். தற்போது அவருக்கு 80 வயது. டிப்ளோமா சிவில் இன்ஜினீயரிங் முடித்த மதன், வேலை தேடி சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்திருக்கிறார். சென்னை அம்பத்தூ,ர் கள்ளிக்குப்பம் பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்திய மதனுக்கு அதில் நஷ்டம் ஏற்பட்டதால், அந்தத் தொழிலைக் கைவிட்டிருக்கிறார். சிறு வயது முதல் ஆன்லைன் கேம்களில் அதிக ஆர்வம்கொண்ட மதன், எப்போதும் செல்போனும் கையுமாகவே இருந்திருக்கிறார்.
மதனுக்கு பப்ஜி கேம்தான் ரொம்பப் பிடிக்கும். அதனால் அந்த விளையாட்டை மணிக்கணக்கில் விளையாடிவந்திருக்கிறார். அதன் மூலம் பப்ஜி கேமிலுள்ள நுணுக்கங்களைத் தெரிந்துகொண்ட அவர் அந்த கேமில் எக்ஸ்பர்ட்டாக இருந்திருக்கிறார். பப்ஜி கேம் குறித்த வீடியோக்களை யூடியூப், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். பப்ஜி கேம் பிரியர்கள் அந்த கேம் தொடர்பாக இணையதளத்தில் தேடியபோது மதனின் வீடியோக்கள் அதிக அளவில் வந்திருக்கின்றன. அதனால் மதனின் பாலோயர்ஸாகப் பலர் மாறியிருக்கின்றனர். இந்தச் சமயத்தில்தான் சேலத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற இன்ஜினீயர், மதனின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். மதனுக்கு இருந்த ஃபாலோயர்ஸைப் பார்த்த கிருத்திகாவும் அவனைப் பின்தொடர்ந்திருக்கிறார். ஒரே ஊர் என்ற முறையில் இருவரும் நட்பாக முதலில் பேசிப் பழகியிருக்கின்றனர். பின்னர் அந்த நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. இவர்களின் காதலுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதும், வீட்டைவிட்டு இருவரும் வெளியேறியிருக்கின்றனர். கிருத்திகா திருமணத்துக்கு முன்பே, கர்ப்பம் அடைந்திருக்கிறார். அதன் பிறகே 2020-ம் ஆண்டு, ஜூன் மாதம் கிருத்திகாவை மதன் திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு ஒன்பது மாதத்தில் ஓர் ஆண் குழந்தை உள்ளது.
மதனுக்கு ஏராளமான ஃபாலோவர்ஸ் இருந்ததால் அதையே பிசினஸாக மாற்ற இருவரும் முடிவு செய்தனர். அதன் பிறகே `டாக்ஸிக் மதன் 18 ப்ளஸ்’ என்ற யூடியூப் சேனலை மதன் தொடங்கியிருக்கிறார். இந்தச் சமயத்தில் பப்ஜி விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டதால் விபிஎன் மூலம் டௌன்லோடு செய்து பப்ஜி கேம்மை மதன் விளையாடி வந்திருக்கிறார். அப்போதுதான் அவரைப் பின்தொடரும் பப்ஜி கேம் பிரியர்களிடம் லைவ்வாக மதன் ஆபாசமாகப் பேசி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் அதை கிருத்திகா கண்டித்திருக்கிறார். அதன் பிறகு யூடியூப் சேனல் மூலம் வருமானம் வரத் தொடங்கியதும் மதனின் இந்தச் செயலுக்கு கிருத்திகாவும் உறுதுணையாக இருந்திருக்கிறார். யூடியூப், நன்கொடைகள் மூலம் கோடிகணக்கான ரூபாய் மதனுக்கும் கிருத்திகாவுக்கும் கிடைத்த பிறகு அவர்களின் லைஃப் ஸ்டைலே மாறியிருக்கிறது.
கிருத்திகாவின் வங்கிக் கணக்கைத்தான் யூடியூப் சேனல் மற்றும் நன்கொடை வசூலிக்க மதன் பயன்படுத்திவந்திருக்கிறார். தற்போது கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் 4 கோடி ரூபாய் இருக்கிறது. யூடியூப் சேனல் மூலம் கிடைத்த வருமானத்தைவிட `உதவி செய்கிறேன், நன்கொடை கொடுங்கள்’ என்று கூறி தன்னுடைய ஃபாலயர்ஸிடமிருந்து மதன் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி ஏமாற்றிவந்திருக்கிறார். மதனைப் பற்றிப் புகழ்ந்து வீடியோவில் பேசுபவர்களுக்குப் பணமும் கொடுத்திருக்கிறார். மதனைப் புகழந்து வீடியோவில் பேசியவர்களின் விவரங்களைச் சேகரித்திருக்கிறோம். மேலும் மதனிடம் விசாரித்தபோது சிலரின் பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவர்களிடமும் விசாரணை நடத்தவிருக்கிறோம். மதனிடமிருந்து ஆடி சொகுசு கார், ஐ பேடு, டேப்லேட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். மதனின் சொத்து விவரங்களையும் சேகரித்துவருகிறோம்" என்றார்.
வீடியோவில், `முடிந்தால் பிடித்துப் பாருங்கள்...’ என்று கெத்துக்காட்டிய யூடியூபர் பப்ஜி மதன், போலீஸிடம் சிக்கியதும் காலில் விழுந்து கெஞ்சிய தகவல், அவனின் ஃபாலோயர்ஸ் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.