கொங்கு மண்டலத்தில் நடந்த ஈமு கோழி மோசடி மாநிலம் முழுவதையும் அதிரவைத்தது. இப்போதுவரை அந்த வழக்குகள் கோவையிலுள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலபாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அதன்படி ஈரோடு பெருந்துறை அருகே கரண்டிபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த மயில்சாமி, சக்திவேல் என்ற சகோதரர்கள் குயின் ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்திவந்தனர்.

“தங்களிடம் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6-10 ஈமு கோழிகளைக் கொடுப்போம்.
அதற்கான ஷெட் அமைத்து தீவனமும் கொடுப்போம். இதற்கு பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.6,000 வீதம் இரண்டு ஆண்டுகளும், போனஸாக ஆண்டுக்கு ரூ.20,000 வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோழிகளைப் பெற்றுக்கொண்டு முதலீட்டுத் தொகையைத் திருப்பிக்கொடுத்துவிடுவோம்” என ஆசைவார்த்தை கூறியிருக்கின்றனர்.
இதேபோல விஐபி உட்பட மூன்று திட்டங்களை அறிமுகப்படுத்தி விளம்பரம் செய்திருக்கின்றனர். இதை நம்பி கோவை, திருப்பூர், கேரளாவைச் சேர்ந்த சுமார் 300 பேர் ரூ.5.65 கோடி முதலீடு செய்திருக்கின்றனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், சொன்னபடி எதையும் செய்யவில்லை. இது குறித்து திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகாரளித்தார். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
அதன்படி இந்த மோசடியில் ஈடுபட்ட மயில்சாமி, சக்திவேல் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறையும், ரூ.5.68 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.