கோவை மாவட்டத்தில், சமீபகாலமாக ரெளடியிசம் அதிகரித்துவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலைச் சம்பவங்களுக்குப் பிறகு ‘Anti Rowdy Drive’ என்ற பெயரில் இதுவரை 80-க்கும் மேற்பட்ட ரெளடிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் தொடங்கி கஞ்சா விற்பனை வரை ‘Praga Brothers’, ‘Rathinapuri Bloods’ ஆகிய இரண்டு குழுக்களாக எதிரும் புதிருமாகச் செயல்பட்டுவருகின்றனர்.
பிரகா பிரதர்ஸ் டீம் தலைவன் கௌதம் சரணடைந்த நிலையில், அவரின் கூட்டாளிகள் தலைமறைவாகினர். அவர்களுடன் ‘டில்லி’ உள்ளிட்ட பல்வேறு ரெளடி டீம்களையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

இந்த நிலையில், பிரகா பிரதர்ஸ் டீமில் தலைமறைவாக இருப்பவர்களைப் பிடிப்பதற்காக கோவை போலீஸ் கர்நாடகா மாநிலம் பெங்களூருக்குச் சென்றது. சுஜி மோகன், பிரசாந்த், அமர், பிரவீன் ஆகிய நான்கு ரெளடிகளை போலீஸார் விரட்டிப் பிடித்து கைதுசெய்திருக்கின்றனர்.
இதற்கிடையே போலீஸ் துரத்தியபோது தப்பி ஓடிய அமர் என்ற ரெளடி, “எனக்கு கை கால்கள் நன்றாக இருக்கின்றன. போலீஸ் என்னை விரட்டுகிறார்கள்” என்று பதற்றத்துடன் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதேபோல சுஜி மோகன் என்ற ரெளடி ரத்தினபுரி காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமாரிடம் பேசுவதாக ஒரு ஆடியோவை பிரகா பிரதர்ஸ் டீம் வெளியிட்டிருக்கிறது.

அதில் சுஜி மோகன், “நான் நான்கு மாதங்களாக எந்தத் தவறும் செய்யவில்லை. நீதிமன்றத்துக்கு வந்தால் வெட்டிவிடுவார்கள். உடன் இருப்பவர்களே துரோகம் செய்கிறார்கள்.

நீயாக வந்துவிட்டால் எதுவும் செய்ய மாட்டேன். நான் பிடித்துவிட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்று கூறுகிறார். இந்தச் சம்பவத்துக்கு பிறகுதான் பெங்களூரில் தனிப்படை போலீஸ் சுமார் 4 கி.மீ சேஸிங் செய்து ரெளடிகளைப் பிடித்திருக்கின்றனர்.