மதுரையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை வைகையாற்றில் கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ராமராயர் மண்டபத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, மதுரை வடக்கு மாசிவீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுடலைமுத்து தன்னுடைய மகனுடன் கள்ளழகர் வேடமிட்டபடி வந்திருந்தார்.

ஆழ்வார்புரம் பகுதியிலிருந்து ராமராயர் மண்டபத்துக்குத் தந்தையும் மகனும் கடும் கூட்ட நெரிசலைக் கடந்து வந்திருக்கின்றனர். வடகரைப் பகுதிக்கு வந்தபோது, சுடலைமுத்து திடீரென மயங்கி கீழே விழுந்திருக்கிறார். அதையடுத்து, அவர் மகன், ஆட்டோவில் அவரை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.
அங்கு சுடலைமுத்துவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். அதையடுத்து, அவரின் உடல் உடற்கூறாய்வுக்காகக் கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து மதிச்சியம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வைகையாற்றில் 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் யார்... எந்த ஊரென்று காவல்துறை விசாரித்துவருகிறது.
இதற்கிடையே, இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவிழாவைப் பயன்படுத்தி வழிப்பறிக் கும்பல் ஒன்று வைகை ஆற்றுக்கரைப் பகுதியில் ஆயுதங்களைக்காட்டி பொதுமக்களிடமிருந்து செல்போன், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்தபடி அடுத்தடுத்த பகுதிகளுக்குச் சென்றிருக்கிறது.

அப்போது அந்தக் கும்பல், கடை வைத்திருந்த குரு என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பியோடியபோது, மதிச்சியம் காவல்துறையினர் விரட்டிப்பிடித்து கைதுசெய்தனர்.
இந்த நிலையில், அதே பகுதியில் எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் என்ற இளைஞர் தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். திருவிழாவைப் பயன்படுத்தி சூர்யபிரகாஷைக் கொலைசெய்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், வழிப்பறிக் கும்பலால் ஆயுதத் தாக்குதலுக்கு ஆளான ஏழு பேர், காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், வைகை ஆற்றின் தரைப்பாலம் அருகே தண்ணீரில் இரண்டு சிறுவர்கள் மூழ்கினர். அதில் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. மற்றொரு சிறுவனை மீட்புப்படையினர் தேடிவருகிறார்கள்.