திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகிலிருக்கும் நயம்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மனுநீதி என்பவர் கடந்த 18.03.2015 அன்று, மனநல குறைபாடு, வாய்ப் பேச இயலாத 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைச் செய்திருக்கிறார். இதுதொடர்பாக, போளூர் மகளிர் போலீஸார், போக்சோ மற்றும் எஸ்.சி&எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்து, மனுநீதியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திருவண்ணாமலை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், நேற்றைய தினம் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட மனுநீதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி பார்த்தசாரதி. மேலும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அதை செலுத்த தவறும் பட்சத்தில் கூடுதலாக ஓராண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். அதோடு, இந்தச் சம்பவம் மிகவும் கொடூரமானது என்பதால், குற்றவாளி மனுநீதி வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து, போலீஸார் மனுநீதியை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.