நாடு முழுவதும் மொபைல் ஆப் மூலம் கடன் கொடுப்பது அதிகரித்திருக்கிறது. தினமும் கடன் வேண்டுமா என்று கேட்டு இரண்டு போன் அழைப்புகளாவது வந்துவிடுகிறது. கடன் வேண்டாம் என்று சொன்னாலும் விடுவதில்லை. ஆனால் மொபைல் ஆப்களில் கடன் பெறுபவர்கள் கடனை திரும்ப செலுத்திய பிறகும் கடன் முழுமையாக திரும்ப செலுத்தவில்லை என்று கூறி போனில் மிரட்டப்படும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. அதுவும் கடன் பெற்றவர்களின் மொபைல் போனில் இருக்கும் நபர்களின் தொடர்பு எண்களை எடுத்து அவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்தல் போன்ற காரியங்களில் மொபைல் ஆப் நிறுவனங்கள் சார்பாக கடன் வசூலிப்பு ஏஜென்டுகள் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் அப்படி தொடர்ச்சியாக சித்ரவதை அனுபவித்த ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலையே செய்து கொண்டார். இதையடுத்து மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி கர்நாடகாவை சேர்ந்த கடன் வசூலிப்பு கும்பலை கைது செய்தனர்.

டெல்லியிலும் இது போன்ற புகார்கள் தொடர்ச்சியாக வந்தது. இதையடுத்து டெல்லி போலீஸார் நடத்திய விசாரணையில், கடன் கொடுப்பதற்கென்றே 100-க்கும் அதிகமான மொபைல் ஆப்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மொபைல் ஆப்கள் சிறிய அளவில் பயனாளர்களுக்கு கடன் கொடுக்கின்றன. பயனாளர்கள் மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்திருப்பதால் அவர்கள் பற்றிய முக்கியமான தகவல்களை சட்டவிரோதமாக திருடி மொபைல் ஆப்கள் சீனா மற்றும் ஹாங்காங் சர்வருக்கு அனுப்பி வைக்கின்றன.
இது போன்ற மொபைல் ஆப்பில் கடன் கேட்டால் சில நிமிடங்களில் பணத்தை சம்பந்தப்பட்ட பயனாளியின் வங்கிக்கணக்கில் வரவு வைத்துவிடுவர். இது குறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் மல்ஹோத்ரா கூறுகையில், ``கடன் கொடுத்த மொபைல் ஆப்கள் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகளை பயன்படுத்தி கடன் பெற்றவர்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். குறிப்பாக ஆபாச படங்களை பயனாளிகளின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவோம் என்று கூறி மிரட்டி பணம் வசூலித்துவிடுகின்றனர். பயனாளர்களும் சமூக அந்தஸ்துக்கு பயந்து கேட்கும் பணத்தை அனுப்பி விடுகின்றனர். அவ்வாறு வசூலாகும் பணம் ஹவாலா முறையில் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 5 முதல் 10 ஆயிரம் வரை கடன் வாங்கியவர்கள் பல லட்சம் வரை திரும்ப கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் சிலர் தற்கொலையும் செய்திருக்கின்றனர்.
சீன கும்பல் கைவரிசை
பணம் வசூலிக்கும் கும்பல் பல வங்கி கணக்குகளில் பணத்தை பெறுகின்றனர். ஒரு வங்கி கணக்கில் ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கும் அதிகமாக பெறுகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசத்தில் இக்கும்பல் அதிகமாக செயல்படுகிறது. இது தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் சீன பிரஜைகள் சிலருக்காக வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் மொபைல் ஆப்களுக்காக செயல்படும் கடன் வசூலிப்பு கால் சென்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து இது போன்ற கால் சென்டர்களை சீன பிரஜைகள் பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் நாடுகளுக்கு இடமாற்றம் செய்துவிட்டதாகவும், இதுவரை சீன பிரஜைகள் 500 கோடி வரை மிரட்டி பறித்து இருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடன் கொடுக்க இக்கும்பல் பயன்படுத்திய கேஸ் போர்ட், ரூபி வே, லோன் கியூப், வாவ் ரூபி, ஸ்மார்ட் வாலட், ஹைய் ரூபி, ஸ்விப்ட் ரூபி, யா கேஸ், ஐஆம் லோன், குரோவ் ட்ரீ, மேஜிக் பேலன்ஸ், ரெட் மேஜிக் போன்ற சில மொபைல் ஆப்களை மட்டும் போலீஸார் வெளியிட்டுள்ளனர். இந்த கடன் வசூலிப்பு கும்பலின் தலைவனாக செயல்பட்ட தீபக் குமாரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆவர்.