கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் குற்றியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரெஜித் (32). இவரின் மனைவி ரிஷா (26). ரிஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, கண்ணூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
ரிஷாவை முன்சீட்டில் அமரவைத்து, பிரெஜித் காரை ஓட்டிச் சென்றிருக்கிறார். பின்சீட்டில் ஒரு குழந்தை உட்பட நான்குபேர் அமர்ந்திருக்கின்றனர். மருத்துவமனைக்குச் செல்ல சிறிது தொலைவே இருந்த சமயத்தில் காரின் முன் பகுதியில் திடீரென புகையுடன் கூடிய தீ ஏற்பட்டிருக்கிறது. உடனே பிரெஜித் காரை நிறுத்தியிருக்கிறார். அதற்குள் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அப்பகுதியினர் கூச்சலிட்டவாறு காரின் அருகில் சென்று பின் பக்க கதவுகளைத் திறந்திருக்கின்றனர். அதோடு பின்பக்க சீட்டிலிருந்த குழந்தை உட்பட நான்குபேரை மீட்டனர். முன்பக்க கதவை திறக்க முற்பட்டபோது, திறக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தீயின் வெப்பத்தால் யாராலும் அருகில் நெருங்கமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கார் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மிக நெருக்கமாக யாரும் செல்லவில்லை.
தீ எரியும்போது காருக்குள் இருந்து பிரஜித், ரிஷா ஆகியோர் அலறியிருக்கின்றனர். தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்து அவர்கள் வந்து தீயை அணைப்பதற்குள் கார் முழுவதும் எரிந்துவிட்டது.
வாகனத்துக்குள்ளேயே பிரெஜித்தும், நிறைமாத கர்ப்பிணியான ரிஷாவும் இறந்துவிட்டனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். கார் ஸ்டீயரிங் பகுதிக்கு அருகே எக்ஸ்ட்ரா பிட்டிங்கில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். பிரசவத்துக்காக மருத்துவமனை சென்ற நிறைமாத கர்ப்பிணியும், அவரின் கணவரும் காரில் ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.