ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிச்சயதார்த்தம் செய்த நபரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த காரணத்துக்காக, கிராம பஞ்சாயத்து உத்தரவின்படி 19 வயது இளம்பெண்ணைத் தாக்கி, முடியை வெட்டி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியிலிருந்து 185 கி.மீ தொலைவிலுள்ள கிராமம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்திருக்கிறது.

இதில் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மேதினிநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மூன்று பேர், பெண்ணின் மைத்துனர் என நான்கு பேர் விசாரணைக்காக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்துப் பேசிய படான் காவல் நிலைய பொறுப்பாளர் குல்ஷன் கவுரவ், ``கிராமவாசிகள் கூறிய தகவலின்படி ஏப்ரல் 20-ம் தேதி பெண்ணுக்குத் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட தேதியில் மணமகன் கிராமத்துக்கு வந்தபோது திருமணத்துக்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் 20 நாள்களுக்கு மேல் காணாமல் போன பெண், ஞாயிற்றுக் கிழமையன்று மீண்டும் கிராமத்துக்கு வந்திருக்கிறார்.

அப்போது உடனடியாக பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் கிராமத்தில் பஞ்சாயத்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. `இவ்வளவு நாள்கள் எங்கு சென்றிருந்தாய்' என்று பஞ்சாயத்தில் கேள்வியெழுப்பப்பட்டதற்கு, பெண் பதில் ஏதும் பேசாமல் மௌனமாக இருந்திருக்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் பஞ்சாயத்து உறுப்பினர்களின் முடிவின் பேரில் பெண்ணை முடி வெட்டி, அடித்து உதைத்து ஊர்வலமாக இழுத்துச் சென்றிருக்கின்றனர்" என்றார்.