கரூர் நகர டி.எஸ்.பி கும்மராஜாவை, கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், "நீங்கள் எப்படி டி.எஸ்.பி ஆனீர்கள்?. நீங்களெல்லாம் காவல்துறையில் இருந்தால், மக்களுக்குதான் கேடு" என்றெல்லாம் ஒரு மணிநேரம் வறுத்தெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் நகர டி.எஸ்.பியாக இருப்பவர் கும்மராஜா. "இவர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார். அதோடு, சாதாரண எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், இப்போது டி.எஸ்.பி என்று தொடர்ந்து பலவருடங்களாகவே கரூரிலேயே பணியாற்றுகிறார். தி.மு.க, அ.தி.மு.க என்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த கட்சிக்கு ஆதரவாளராக மாறிவிடுகிறார்.
இதனால், இவரை ஆளுங்கட்சியினர் இங்கேயே வைத்துக்கொள்கிறார்கள். கேஸ்களையும் சரியாக டீல் செய்வதில்லை. அப்படி ஒரு கேஸை சரியாக கையாளாமல்தான், மாவட்ட முதன்மை நீதிபதியின் குட்டு வாங்கியிருக்கிறார்" என்று காவல்துறையைச் சேர்ந்த சிலர் சொல்கிறார்கள். என்ன நடந்தது என்று விசாரித்தோம். கரூர் தான்தோன்றிமலையில் இயங்கி வருகிறது, அரசு கலைக் கல்லூரி.

இந்த கல்லூரியில் பொருளியல் துறைக்குத் தலைவராக பணியாற்றி வந்தவர் இளங்கோவன். `52 வயதான இவர் மாணவிகளை சீண்டிவருவதாக புகார் எழுந்திருக்கிறது. இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று மூன்று மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் தொடர்போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், அவர் கைது செய்யப்பட்டார். அப்போதே, மாணவர்கள், `காவல்துறை இளங்கோவனுக்குச் சாதகமாக செயல்படுகிறது' என்று குற்றம்சாட்டினர். இருந்தாலும், கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். கரூர் கோர்ட்டில் நடைபெற்று வந்த வழக்கில், கரூர் காவல்துறையினர் 90 நாள்களை கடந்தும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இளங்கோவனுக்கு ஃபெயில் கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஃபெயில் பெட்டிஷனை பார்த்துக் கோபப்பட்ட மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், விசாரணை அதிகாரியான கரூர் நகர டி.எஸ்.பி கும்மராஜாவை ஆஜராக சொல்லி வறுவறுவென வறுத்து எடுத்திருக்கிறார்.
இதுசம்பந்தமாக கோர்ட்டில் நடந்தவற்றை விவரித்த வழக்கறிஞர்கள் சிலர், `கோர்ட்டுக்கு கும்மராஜா வந்ததும், பிடிபிபிடியென பிடித்துவிட்டார் நீதிபதி. குற்றவாளியை கைது பண்ணி 90 நாள்கள் ஆகியும், ஏன் அவர்மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை? குற்றப்பத்திரிகையை தாக்கல் பண்ணலன்னா, அவருக்கு ஈஸியா ஃபெயில் கிடைக்க நீங்களே வழிவகுத்தீர்கள் என்று ஆகாதா? உங்களை எல்லாம் யார் போலீஸ் வேலைக்கு எடுத்தது? நீங்களெல்லாம் எப்படி டி.எஸ்.பி ஆனீர்கள்? அப்ப நீங்கள் குற்றவாளியை தப்பிக்க வைக்க காரணமாக இருந்திருக்கிறீர்கள்? உங்களை மாதிரி ஆள்கள் காவல்துறையில் இருந்தால் பொதுமக்களுக்குதான் கேடு. உங்களுக்கு மேல உள்ள காவல்துறை அதிகாரி யார்?
நீங்க 90 நாள்களும் என்ன பண்ணிகிட்டு இருந்தீங்கன்னு தினவாரியான அபிடபிட்டை கோர்ட்டில் தாக்கல் பண்ணுங்கடி.எஸ்.பிக்கு நீதிபதி உத்தரவு
குற்றவாளி மீது, அதுவும் கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர்மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் என்ன கஷ்டம்? உங்கள் வீட்டில் பொம்பளை புள்ளைங்க இல்லையா? எனக்கு பெண்பிள்ளை இருக்காங்க. இப்படிப்பட்ட வழக்கில் இவ்வளவு அலட்சியமாக 90 நாள்கள் குற்றப்பத்திரிகையை தாக்கல் பண்ணாம, அப்படி என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க? எனக்கு காரணம் சொல்லணும். இளங்கோவனுக்கு இன்னைக்கு ஃபெயில் தரமுடியாது. நீங்க 90 நாள்களும் என்ன பண்ணிகிட்டு இருந்தீங்கன்னு தினவாரியான அபிடபிட்டை கோர்ட்டில் தாக்கல் பண்ணுங்க. திங்கள்கிழமை தாக்கல் பண்ணனும். அன்னைக்கு இந்த மனுமீதான விசாரணையை தள்ளி வைக்கிறேன்'னு ஏக பரேடு நடத்தினார். கும்மராஜா கப்சிப்னு ஒருமணிநேரமும் நின்றார்'' என்றார்கள்.