திருச்சியைச் சேர்ந்த மருத்துவ மாணவியின் வங்கிக் கணக்கிலிருந்து, மிஸ்ஸான 3 லட்சம் ரூபாயை மூன்று நாள்களுக்குள் திருப்பி வழங்க பேடிஎம்-க்கு ஆணையிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கடந்த மே 12-ம் தேதி வெளியான இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பாகக் கருதப்படுகிறது. இது குறித்து மாணவியின் வழக்கறிஞர் சரத் சந்திரனிடம் பேசினோம். "இந்த வழக்கைப் பொறுத்தவரை, முதலில் சைபர் கிரைம் போலீஸார் எஃப்.ஐ.ஆர் போடவில்லை. காரணம் மாணவியின் கைபேசியை பேடிஎம் மூலமாக ஹேக் செய்தவர்கள் பீகார், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு போலீஸாரால் அவ்வளவு தூரம் சென்று வழக்கை கையாள முடியாது. இந்தக் காரணத்தினாலே முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படவில்லை.

உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு புகார் பதிவுசெய்யப்பட்டது. பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இயங்குபவையே. இந்த வழிகாட்டுதலின்படி, பணம் தொலைந்த மூன்று நாள்களுக்குள் வாடிக்கையாளர் புகார் செய்தால், அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டியது நிறுவனங்களின் பொறுப்பு. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் பணத்தைத் திருப்பித் தருவதில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முதலில் இதை உறுதிசெய்திருக்கிறது.
மாணவி ஆன்லைனில் ஆடை வாங்க பேடிஎம் மூலமாக முயன்றபோது, வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்ச ரூபாய் முறையே மூன்று முறை தவறான லிங்க் மூலமாக 3 லட்ச ரூபாய் வரை பணத்தைத் திருடியிருக்கின்றனர். ஓடிபி எதுவும் வரவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிட்டி யூனியன் வங்கியைத் தொடர்புகொண்டபோது அவர்கள், பேடிஎம் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளச் சொன்னார்கள். பேடிஎம் நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, `நாங்கள் வெறும் சேவை நிறுவனம் மட்டுமே நீங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள்' என்று கூறினர்.
வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தபோது, ஆர்.பி.ஐ-யும், `நீங்கள் இருவரில் ஒருவர் முடிவுசெய்துகொள்ளுங்கள்' என்று வங்கியையும், பேடிஎம் நிறுவனத்தையும் கைகாட்டினார்கள். ஆனால், நீதிபதி மஞ்சுளா இதற்கு பேடிஎம் நிறுவனமும், ஆர்.பி.ஐ-யும் பொறுப்பு என்று கூறியிருக்கிறார். இந்தத் தீர்ப்பு இது போன்ற வழக்குகளில் முன்னுதாரணமாகக் காட்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
இதற்கு முன்பாக வாடிக்கையாளர், வங்கிகளுக்கிடையே மட்டுமே பணப் பரிவர்த்தனை நடந்தது. ஆனால், சமீப காலமாக இதில் ஒரு மூன்றாவது நபர் உள்ளே நுழைந்திருக்கிறார். அதுவே யுபிஐ செயலி. இனிமேல் யுபிஐ செயலி மூலமாக நடக்கும் மோசடிகளுக்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்பு என்பதையே இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது.

2021-ம் ஆண்டு தங்கள் செயலியிலுள்ள பிரச்னைகளைக் களையும்வரை புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கக் கூடாது என உத்தரவிட்டு, பேடிஎம் நிறுவனத்துக்கு ஆர்.பி.ஐ தடை விதித்தது. எனவே, பேடிஎம் இது போன்ற மோசடிகளிலிருந்து தங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் வகையில் தங்களுடைய செயலியைப் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டிய நெருக்கடி, இந்தத் தீர்ப்பின் மூலமாக உருவாகும். எனக்குத் தெரிந்த வகையில் பேடிஎம் செயலி மூலமாக நடக்கும் மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்துவருகின்றன. இது தொடர்பாக பீகார், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் போலீஸாரே இது போன்ற மோசடிகள் தினமும் நடக்கின்றன... இதற்காகவெல்லாம் உத்தரப்பிரதேசத்துக்கும், பீகாருக்கும் நாங்கள் செல்ல முடியுமா... என்று கேட்கின்றனர்.
அவர்கள் சொல்வதிலும் ஒரு வகையில் நியாயம் இருக்கிறது. 3,000 ரூபாய் தொலைத்த ஒருவருக்காக அவர்கள் அங்கு சென்று வர முடியாது. எனவே, இது போன்ற மோசடி விவகாரங்களில் இன்டர் ஸ்டேட் லிங்க் தேவைப்படுகிறது. இது போன்ற நடைமுறை சிக்கல்களின் காரணமாகவே பல புகார்கள் பதிவு செய்யப்படுவதில்லை. மேலும், இது போன்ற மோசடிப் புகார்களில் சைபர் கிரைம் போலீஸார் பாதிக்கப்பட்டவரின் கைபேசியைக் கேட்கின்றனர். பலருக்கும் அதைக் கொடுப்பதில் தயக்கம் இருக்கிறது. ஒருவேளை கம்ப்யூட்டர் மூலமாக மோசடி நடந்தால் வாடிக்கையாளரின் கம்ப்யூட்டரைக் கேட்பார்களா... இது போன்ற நடைமுறைகளை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது" என்றார்.

இது போன்ற மோசடி நடவடிக்கைகளிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து சைபர் வல்லுநர் ஹரிஹரசுதனிடம் பேசினோம், "முதலில் இது போன்ற மோசடிகள் நடந்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1903 என்ற ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்புகொண்டு நிச்சயம் புகாரளிக்க வேண்டும். இப்படிப் புகாரளிக்கும் பட்சத்தில், அவர்களுடைய பணம் திரும்பக் கிடைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. இரண்டாவதாக, அவர்கள் எந்த யுபிஐ செயலி மூலமாகப் பணத்தை இழந்தார்களோ, அதில் Dispute Rise செய்ய வேண்டும்.
இப்படிச் செய்வதன் மூலமாக வழக்கமாக நமக்கு காலில் ஸ்பேம் என்று வருவதுபோல, அந்த மோசடி நபருக்கு பணம் அனுப்பும்போது This transaction is a fraudulent transaction என கீழே சிவப்பு கலரில் ஒரு மார்க் வரும். உதாரணமாக Google Pay-யில் TAG என்று ஒரு டீம் இருக்கிறது. TAG என்றால் Threat Analysis Team. இது போன்று பத்து முறை ஒரு குறிப்பிட்ட எண் அல்லது வங்கிக் கணக்கு சார்ந்து புகார் எழுப்பப்படும்போது சம்பந்தப்பட்ட யுபிஐ நிறுவனங்கள் அதன்மீது நடவடிக்கை எடுக்கும்.

எனவே, நாம் ஏமாந்துவிட்டோம் என்று மனவிரக்தி அடையாமல் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பணத்தையும் திரும்பப் பெற முடியும். இது போன்ற மோசடி நபர்களையும் அடையாளம் காட்ட முடியும். இது எல்லாவற்றையும்விட லிங்க் மூலமாக வரும் பேமெண்ட்டுகள் அனைத்தையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
லிங்க் அனுப்புவது எல்லாம் காலாவதியான கலாசாரம். இப்போது வாலெட் மூலமாக முதலில் உங்களுக்குப் பணம் அனுப்புவார்கள். பின் அந்தப் பணத்தைத் திருப்பி அனுப்புங்கள் என்று கூறி யுபிஐ செயலிகள் மூலமாகவே அக்சப்ட் செய்யச் சொல்வார்கள். அப்படிச் செய்யும்போது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடு போகும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் பொதுமக்கள் கவனமாக இருப்பது மட்டுமே இது போன்ற மோசடிகளைத் தடுக்க உதவும்" என்றார்.