சென்னை ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்பது மாணவர்கள் பலரின் கனவாக இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், இந்த ஐஐடி வளாகத்தில் தங்கி கல்வி பயின்றுவருகிறார்கள். இங்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த கேதார் சுரேஷ் என்ற 20 வயது மாணவர் பி.டெக் இரண்டாம் ஆண்டு பயின்றுவந்தார்.
இந்த மாணவர் அதே ஐஐடி வளாகத்திலுள்ள காவேரி விடுதியில் தங்கிப் படித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், இன்று அந்த மாணவரின் விடுதி அறைக் கதவு நீண்ட நேரமாகப் பூட்டியிருப்பதைப் பார்த்த விடுதியிலுள்ள சகமாணவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மாணவர்கள் இது குறித்து விடுதிக் காப்பாளருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
அங்கு வந்த விடுதிக் காப்பாளர், இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், மாணவரின் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மாணவர் கேதார் சுரேஷ் தனது அறையிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீஸார் கேதார் சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து, விடுதிக் காப்பாளர், அங்குள்ள சகமாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். மாணவர் கேதார் சுரேஷின் தற்கொலையுடன் சேர்த்து சென்னை ஐஐடி-யில் இந்தாண்டு மட்டும் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.