பாலியல் பிரச்னைகள் இருப்பவர்கள், தாம்பத்ய உறவுக்கு வயாகரா போன்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்வது வழக்கம். அதுவே அளவுக்கு அதிகமாகிவிட்டால் விபரீதத்தில் முடிந்துவிடும். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த 41 வயதான நபர் ஒருவர், தன்னுடைய பெண் தோழியுடன் அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கினார். அந்த, நபர் மது, வயாகரா மத்திரைகளையும் வாங்கிச் சென்றிருந்தார். இரவு முழுவதும் உறங்காமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மது அருந்திக்கொண்டே, தான் வாங்கி வந்த இரண்டு வயாகரா மத்திரைகளையும் சாப்பிட்டார். காலையில் அவருக்கு வாந்தி, குமட்டல் ஏற்பட்டிருக்கிறது.

உடனே மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று அவருடன் இருந்த பெண் கேட்டுக்கொண்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறிய அந்த நபர், தனக்கு இது போன்று முன்பும் நடந்திருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், நேரம் ஆக ஆக அவரின் நிலைமை மோசமடைந்தது.
உடனே அவரை அவருடனிருந்த பெண் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனலிக்காமல் அந்த நபர் இறந்துபோனார். டாக்டர்களின் சோதனையில் மூளைக்குப் போதிய அளவு ஆக்சிஜன் செல்லாததே உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிவித்தனர். அந்த நபருக்கு இதற்கு முன்பு எந்தவித உடல் கோளாறும் இருந்தது கிடையாது.

அதோடு அவர் ஆபரேஷனும் செய்துகொண்டதில்லை. ரத்தத்துடன் வயாகரா கலந்து ரத்தக்கட்டி ஏற்பட்டிருக்கிறது. ரத்தக்கட்டி காரணமாக, உடலுக்குள் ஆக்சிஜன் செல்ல முடியவில்லை. அதோடு அவருக்கு ஏற்கெனவே இருந்த அதிகப்படியான ரத்த அழுத்தமும் சேர்ந்துகொண்டதால் உயிரிழக்க நேரிட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.