சென்னை அருகேயுள்ள வானகரம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் (45). இவர் மாங்காட்டிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் டீனாகப் பணிபுரிந்துவருகிறார். இவரின் மனைவி வள்ளியும் மருத்துவர். இவர்களின் மகள் சைலா (21). இவர் மாங்காட்டிலுள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்துவந்தார். இன்று காலை வழக்கம்போல் உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த சைலா, நீண்ட நேரமாகியும் அறையைவிட்டு வெளியில் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த அவரின் அம்மா வள்ளி, அறைக்குள் சென்று பார்த்தபோது சைலா தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மாணவி சைலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மாங்காடு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``மாணவி சைலாவின் மரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது. மாணவியின் அப்பாவும் அம்மாவும் டாக்டர்களாக இருக்கும் நிலையில், சைலாவையும் மருத்துவம் படிக்கவைத்திருக்கிறார்கள். சைலா இரட்டைக் குழந்தைகளில் ஒருவர். இவருடன் பிறந்த சகோதரர் மாற்றுத்திறனாளி. அதனால் அவரை சைலாவின் அம்மா வள்ளி கவனித்துவருகிறார். இந்தச் சூழலில்தான் சைலா தற்கொலை செய்திருக்கிறார்" என்றனர்.