83 சதவிகித இந்தியர்கள் AI - ஆல் உருவாக்கப்பட்ட பொய்யான தொலைபேசி அழைப்புகளை நம்பி பணத்தை இழந்துள்ளதாக ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான McAfee நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது.

ஒரு நபரின் குரலை குளோன் செய்ய வெறும் மூன்று விநாடி ஆடியோ மட்டுமே AI-க்கு தேவைப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் AI தொழில்நுட்பத்தால் எவ்வாறு ஆன்லைன் குரல் மோசடிகள் அதிகரிக்கிறது என்ற ஆராய்ச்சியை இந்நிறுவனம் மேற்கொண்டது. 7 நாடுகளில் உள்ள 7,054 நபர்களிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 1,010 பேர் இந்தியர்கள்.
ஆய்வின் முடிவில்,
``இந்தியாவில் உள்ள 47 சதவிகித பெரியவர்கள் தங்களுக்கு AI - ஆல் உருவாக்கப்பட்ட பொய்யான குரல் மோசடி அழைப்புகள் வந்ததாகத் தெரிவித்துள்ளனர். AI - ஆல் உருவாக்கப்பட்ட பொய்யான தொலைபேசி அழைப்புகளை நம்பி 83 சதவிகித இந்தியர்கள் பணத்தை இழந்துள்ளனர்.
இதில் 48 சதவிகிதத்தினர் 50,000-க்கும் மேல் பணத்தை இழந்துள்ளனர். 69 சதவிகித்தினர் AI - ஆல் உருவாக்கப்பட்ட குரலையும், மனிதர்களின் குரலையும் அடையாளம் காண இயலவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
பணம் தேவைப்படும் நண்பர் அல்லது அன்புக்குரியவரிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் வாய்ஸ் மெசேஜ் அல்லது வாய்ஸ் நோட் 66 சதவிகித இந்தியர்கள் பதிலளித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் அதிகம் இடம்பெறுவது குறித்த ஐயத்தையும் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
27 சதவிகித இந்தியர்கள் சமூக வலைதளத்தில் வரும் செய்திகளைக் குறைந்தளவே நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாய்ஸ் மெசேஜ் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனத் தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.