ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் 15 பேரின் புகைப்படங்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதாமாதம் ரூ.15,000 வரை வட்டி கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பிய ஏராளமான மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் வட்டித் தொகை, முதலீட்டுத் தொகை என எதுவும் தராமல் இந்த நிறுவனம் மக்களை ஏமாற்றியது.

இதைத் தொடர்ந்து, மோசடியில் பாதிக்கப்பட்ட மக்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கை பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நிறுவனத்தின் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 42 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சிக்கிய ஆதாரங்களின்படி ஹிஜாவு நிறுவனம் சுமார் 14,126 பேரிடம் இருந்து ரூ.1,046 கோடி பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளது என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநர்கள் சௌந்தரராஜன், அலெக்சாண்டர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தலைமறைவு ஆனார்கள். இவர்களைப் பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்தனர்.

இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் சௌந்தரராஜன், கலைச்செல்வி, ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான இயக்குநர் அலெக்சாண்டர், அவரின் மனைவி மகாலட்சுமி, இனயா, கோவிந்தராஜுலு, சுஜாதா காந்தா உள்ளிட்ட 15 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதனால் இவர்களது படங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வெளியிட்டு, இவர்களைப் பற்றி தகவல் தந்தால் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.