Published:Updated:

`பார்ட் டைம் ஜாப்' வலை விரித்து, ரூ.46 லட்சம் அபேஸ்... தூத்துக்குடியில் விநோத மோசடி!

கைது செய்யப்பட்ட எலியாஸ் பிரேம்குமார்

டெலிகிராம் ஆப் மூலம் `பார்ட் டைம் ஜாப்’ என மெசேஜ் அனுப்பி அதன் மூலம் ரூ.46 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 61 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் பல்வேறு நிறுவன பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:

`பார்ட் டைம் ஜாப்' வலை விரித்து, ரூ.46 லட்சம் அபேஸ்... தூத்துக்குடியில் விநோத மோசடி!

டெலிகிராம் ஆப் மூலம் `பார்ட் டைம் ஜாப்’ என மெசேஜ் அனுப்பி அதன் மூலம் ரூ.46 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 61 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் பல்வேறு நிறுவன பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட எலியாஸ் பிரேம்குமார்

தூத்துக்குடி, சின்னமணி நகரை சேர்ந்தவர் தங்கதுரை. இவர், டெலிகிராம் ஆப் பயன்படுத்தியபோது அதில் Part Time Job தேவையா? என்கிற விளம்பரம் Aashna (@Aashna_2mi) என்ற ID-யில் இருந்து வந்துள்ளது. அந்த விளம்பரத்தைப் பார்த்த தங்கதுரை, தனக்கு மெசேஜ் அனுப்பிய அந்த எண்ணுக்குப் போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.  

பறிமுதல் செய்யப்பட்டவை
பறிமுதல் செய்யப்பட்டவை

அந்த போனை எடுத்து பேசியவர், `` FROSCH Travel Management Company’ என்ற  நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறோம். அந்த நிறுவனம், உலகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் தங்களுடைய கம்பெனியின் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதால் அதை மேம்படுத்துவதற்காக அதன் சம்பந்தப்பட்ட Star Ratings கொடுப்பதன் மூலம் இந்த கம்பெனியின் வருமானத்தை அதிகரிக்க முடியும்'' என்றவர்,  அந்த நிறுவனத்துக்கு Star Ratings கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் தங்கதுரையிடம் கூறியுள்ளனர்.

இதை அடுத்து முதலில் 100, 1500 லாபம் கொடுப்பது போல் கொடுத்து தங்கதுரையை நம்ப வைத்துள்ளனர். பின்பு, அதிக கமிஷன் வேண்டுமென்றால், பணத்தை முதலீடு செய்து அவர்கள் கூறும் பணிகளை (Task) செய்யும்படியும் தங்கதுரையிடம் கூறியுள்ளனர்.

தங்கதுரையும் அவர்கள் கூறிய வளைதளத்தில் பல்வேறு பணிகளுக்காக (Task) பல தவணைகளாக மொத்தம் ரூ.45,91,054 பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால், வருமானமோ, லாபமோ கிடைக்கவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த தங்கதுரை இது குறித்து NCRP-ல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

தங்கதுரை அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் மானூரைச் சேர்ந்த எலியாஸ் பிரேம் குமார் என்பவரை அவரது வீட்டில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.  

கைது செய்யப்பட்ட  எலியாஸ் பிரேம்குமார்
கைது செய்யப்பட்ட எலியாஸ் பிரேம்குமார்

அவரிடமிருந்து ஒரு லேப்டாப், ஒரு செல்போன், 9 சிம் கார்டுகள், 61 ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் பல்வேறு நிறுவனப் பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட எலியாஸ் பிரேம் குமார், மேலும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் வங்கிகளில் 21 வங்கி கணக்குகளை மோசடி செய்ய பயன்படுத்தியுள்ளதும், அந்த வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ.25 கோடி பணபரிவர்த்தனை நடந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து சைபர் குற்றப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட  எஸ்.பி பாலாஜி சரவணன் கூறுகையில், ``பணத்தை முதலீடு செய்து அதன்மூலம் வருமானம் பெறுவது என்பது நல்ல விஷயம்தான். போலி செயலிகள், போலி முதலீட்டு நிறுவனங்கள், போலித் திட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், முதலீடு செய்யப்படும் திட்டங்கள் உண்மைதானா என்பதை நன்கு விசாரித்துவிட்டு முதலீடு செய்ய வேண்டும்.

இதுபோன்று பல்வேறு Like and Review Scam சைபர் குற்றங்கள் Telegram மற்றும் Whatsapp மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு பல புகார்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

இதனால் Like and Review Scam தொடர்பாக உங்களுக்குப் பழக்கம் இல்லாத நபர்கள் தொடர்புகொண்டு Youtube Review, movie Review, Location Review இதுபோன்று கூறினால் அவர்களை நம்பி பணத்தை முதலீடு செய்து, மோசடி செய்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

பாலாஜி சரவணன்- எஸ்.பி
பாலாஜி சரவணன்- எஸ்.பி

அதே போல, அதிக வட்டி, கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி மக்கள் பணத்தை முதலீடு செய்து, பின்னர் ஏமாறுகிறார்கள். எனவே, முகம் தெரியாத நபரை நம்பி பணத்தை முதலீடு செய்யும்முன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

அரசு நிதி நிறுவனங்கள், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு, முதலீடுகளைச் செய்யலாம். நிதி சம்பந்தமான ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெற்று பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும்" என எச்சரித்துள்ளார்.

வேலை, முதலீடு என யார் பணம் கேட்டாலும் நன்கு விசாரித்து விட்டுத் தருவதே சரியான முடிவாக இருக்கும்! உஷார் மக்களே!