தஞ்சாவூர் ரஹ்மான் நகரில் வசித்து வந்த கமாலுதீன் என்பவர் ராஹத் டிராவல்ஸ் நடத்தி வந்தார். தன் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகமான டிராவல்ஸ் பஸ்கள் வாங்கி அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு அதிகமான லாபம் தருவதாக விளம்பரம் செய்தார்.
ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.11,000 வழங்குவதாக கமாலுதீன் கூறியதை நம்பி தஞ்சாவூர், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் 1,000 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு செய்தனர்.

இதில் ஆரம்பத்தில் சில மாதங்களுக்கு லாபத்தில் பங்கு என்று பணம் கொடுத்துள்ளார். இப்படி 2020 பிப்ரவரி மாதம் வரை முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. பங்குத்தொகை கொடுப்பதை நிறுத்தியுள்ளார்.
ஆனால், அவர் வசூலித்த பலகோடி ரூபாய் பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பதை அறிந்துகொண்ட முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை திருப்பி கேட்ட நேரத்தில் கமாலுதீன் மரணமடைந்த நிலையில், முதலீட்டாளர்களின் புகாரின் அடிப்படையில் கமாலுதீன் மனைவி ரெஹானா பேகம், சகோதரர் அப்துல் கனி, நிறுவனத்தின் மேனேஜர் நாராயணசுவாமி ஆகியோர் மீது திருச்சி பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வேண்டி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தனர்.

அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி, ``நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 6,500 பேர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி மட்டும் 410 கோடி ரூபாய் மோசடி செய்யப் பட்டுள்ளது. மேலும், பல ஆயிரம் பேரிடம் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி நடந்துள்ளது.
இதுவரை 22 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை முடக்க அரசுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. 57 ஆம்னி பஸ்களும் கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுளளன.
ராஹத் டிராவல்ஸ் உரிமையாளர் கமாலுதீன் இறந்த பிறகு, அவர் சகோதரர் அப்துல் கனியின் வங்கிக் கணக்கிலிருந்தும், ரெஹானா பேகம் கணக்கிலிருந்தும் கோடிக்கணக்கில் பரிவர்த்தனை நடந்துள்ளது. மேனேஜர்தான் பலரிடமும் பணம் வசூலித்துள்ளார். வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர்.

இப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்து வருகின்றனர். இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்று வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ``அப்துல்கனி பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.31.99 கோடிக்கு மேல் எடுத்துள்ளார். ரஹானாபேகம் பல்வேறு வங்கிகளில் ரூ.1.55 கோடி எடுத்துள்ளார். 3வது மனுதாரர் மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவர்தான் முதலீட்டாளர்களின் அனைத்து கணக்குகளையும் பராமரித்துள்ளார். மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. இவர்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். 1,000 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்த வேண்டியது அவசியம். இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. என்பதால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.
குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.