ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகிலிருக்கும் மேல்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், சென்னை கோயம்பேடு பகுதியிலுள்ள சலூன்கடை ஒன்றில் வேலை செய்கிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், ஐந்து வயதில் ஒரு மகளும், மூன்று வயதில் ஓர் ஆண் குழந்தையும் இருந்தனர். மனைவி, குழந்தைகள் மேல்புலம் கிராமத்திலுள்ள வீட்டிலேயே தங்கியிருக்க, சங்கர் மட்டும் கோயம்பேட்டில் தங்கியிருந்து வேலை செய்துவருகிறார். அவ்வப்போது, அவர் ஊருக்கு வந்து குடும்பத்தினரைப் பார்த்துவிட்டுச் செல்வாராம். நேற்றைய தினமும் சங்கர் வீட்டுக்கு வந்துவிட்டுச் சென்றிருக்கிறார். அப்போது, கணவன், மனைவி இடையே ‘ஏதோ’ விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மாலை ரேணுகாவும், அவரின் இரண்டு குழந்தைகளும் கிராமத்தின் அருகேயுள்ள விவசாயக் கிணற்றில் சடலமாக மிதப்பதைக் கண்ட ஊர்மக்கள் அதிர்ச்சியடைந்து, கலவை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார், தீயணைப்பு வீரர்களுடன் விரைந்துவந்து சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கோயம்பேட்டில் இருந்த கணவன் சங்கருக்கும் தகவல் கொடுத்து விரைவாக வரவழைத்தனர். அவரும் வீடு வந்து சேர்ந்தார். மனைவி, குழந்தைகளை இழந்த துக்கத்தில் கதறி அழுத சங்கரைத் தேற்றிய போலீஸார், இந்தச் சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய அவரிடமும், அவரின் தாய், உறவினர்களிடமும் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.