நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 54). இவர், லாரி டிரைவராகப் பணியாற்றிவருகிறார். இவர் சொந்தமாக கார் வாங்க ஆசைப்பட்டு, அதற்காகப் பணத்தை சேர்த்துவந்திருக்கிறார். அதோடு, லட்சுமணன் பழைய கார் வாங்குவதற்காக, ஃபேஸ்புக் மூலம் பழைய கார் யாராவது விற்பனைக்கு வைத்திருக்கிறார்களா என்று தேடிவந்திருக்கிறார். இந்த நிலையில், அவரின் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் லட்சுமணனிடம், தன்னிடம் பழைய கார் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அதோடு அந்த கார் நல்ல நிலையில் இருப்பதாகவும், அதைக் குறைந்த விலையில் தருவதாகவும் கூறியிருக்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த லட்சுமணன், அந்த காரை தான் வாங்கிக்கொள்வதாக அந்த மர்ம நபரிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் அந்த மர்ம நபர், 'ரூ.1.5 லட்சம் கொடுத்தால் காரை வீட்டுக்கே கொண்டுவந்து டோர் டெலிவரி செய்கிறேன்' என்று லட்சுமணனிடம் தெரிவித்திருக்கிறார். இதை நம்பிய லட்சுமணன், அந்த நபர் கொடுத்த வங்கிக் கணக்கில் போன் பே மூலம் மூன்று தவணையாக, ரூ.1,50,000 பணத்தை அனுப்பியிருக்கிறார். ஆனால், பணம் அனுப்பி இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த நபர் காரை கொடுக்கவில்லை. மேலும் அவரின் செல்போனுக்குத் தொடர்புகொண்டபோது அந்த செல்போன் உபயோகத்தில் இல்லை என்று தகவல் வந்திருக்கிறது. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த லட்சுமணன், இது பற்றி நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து, அவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். லாரி டிரைவரை ஏமாற்றி, கார் வழங்குவதாகக் கூறி அவரிடமிருந்து ஒன்றரை லட்சம் ஏமாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.