டெல்லியிலுள்ள கோர்ட்டுகளில் அடிக்கடி கைதிகள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுவருகிறது. டெல்லி சிறைகளில் கைதிகள் மோதிக்கொள்கின்றனர். இன்று காலை டெல்லி சகத் கோர்ட்டுக்குள் ராதா என்பவர் வாக்குமூலம் கொடுப்பதற்காக தன்னுடைய வழக்கறிஞருடன் வந்திருந்தார். அவர் வழக்கறிஞர்கள் அறைக்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அந்நேரம் அவரை நோக்கி, மர்மநபர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். நான்கு முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ராதாவும் அவருடன் நின்ற வழக்கறிஞர் ஒருவரும் காயமடைந்தனர். இரண்டு பேரும் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கோர்ட்டிலிருந்த கேன்டீன் வழியாக தப்பி ஓடிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ராதாவின் கணவர் என்று தெரியவந்தது. அவர் வழக்கறிஞர்போல் வேடமிட்டு கோர்ட்டுக்கு வந்திருக்கிறார். ராதாவுக்கு அவருடைய கணவர் ரூபாய் 25 லட்சம் கொடுத்திருந்தார்.
அந்தப் பணத்தை திரும்பக் கொடுப்பது தொடர்பாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். தப்பியோடிய கணவனை போலீஸார் தேடிவருகின்றனர்.
ராதா தன்னுடைய கணவர்மீது கோர்ட்டில் மோசடி வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்தத் துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து டெல்லியின் சட்டம் - ஒழுங்கு குறித்து முதல்வர் கெஜ்ரிவால் கவலை தெரிவித்திருக்கிறார்.

வழக்கறிஞர்களும் டெல்லி கோர்ட்டின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்திருக்கின்றனர். துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து டெல்லி கோர்ட்டுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
2021-ம் ஆண்டு டெல்லி ரோஹினி கோர்ட்டுக்குள் வழக்கறிஞர்கள்போல் வேடமிட்டு வந்த இரண்டு பேர், ஜிதேந்தர் என்ற கிரிமினலைச் சுட்டுக் கொலைசெய்தனர். இதில் குற்றவாளிகள் இரண்டு பேரும் போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.