நதமிழகத்தில் குட்கா, பான் மசாலா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்ய கடந்த 2013-ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி தங்கு தடையின்றி குட்கா விற்பனை நடந்துவந்தது. குட்கா விற்பனையில் பெரிய நெட்வொர்க் இருக்கிறது. தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் குட்கா விற்பனைக்குத் தடை இல்லாததால் அங்கிருந்து லாரிகள், ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு குட்கா கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக பெங்களூருவிலிருந்துதான் அதிக அளவில் தமிழகத்துக்கு குட்கா கடத்திவரப்படுகிறது.

அதைத் தடுக்க DRBTP (Drive Against Banned Tobacco Products) என்ற திட்டத்தை சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் சில தினங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீஸார் சென்னை பெருநகர காவல் எல்லைகளில் வாகனச் சோதனையில் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்புத்துறை, சென்னை போலீஸார் ஆகியோர் இணைந்து குட்கா கடத்தல், விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
சென்னை முழுவதும் நடத்தப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையால் குட்கா பதுக்கிவைத்திருந்ததாக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39 பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். 1,051.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியிலுள்ள ஒரு குடோனில் 23-ம் தேதி சோதனை செய்தபோது கொடுங்கையூரைச் சேர்ந்த முத்து (34), ஜோசப் (27) ஆகியோர் 152 கிலோ குட்காவைப் பதுக்கிவைத்திருந்தனர். அதைப் பறிமுதல் செய்திருக்கிறோம்.

24-ம் தேதி பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மளிகைக் கடையில் குட்காவை விற்பனை செய்த சஞ்சய் காந்தி (37) என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி குட்கா மொத்த வியாபாரம் செய்துவரும் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த குமரன் (41), கிரண் (38) ஆகியோரைக் கைதுசெய்து 257 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இது தவிர சென்னை முழுவதும் நடந்த சோதனையில் 1,051.5 கிலோ குட்கா பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.