திருவண்ணாமலை மாவட்டம், செய்யார், அவ்வையார் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் நகைக்கடை, துணிக்கடை நடத்திவருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் டிரைவராக வேலை பார்த்துவந்தார். 5.4.2023-ம் தேதி டிரைவர் ஏழுமலையிடம் தங்க நகைகளைக் கொடுத்து லேசர் கட்டிங் செய்வதற்காக சென்னைக்கு அனுப்பிவைத்தார் விக்னேஷ். அதன்படி ஏழுமலையும் சுமார் 30.5 சவரன் தங்க நகைகளை சென்னை பாரிமுனைக்குக் கொண்டு வந்து லேசர் கட்டிங் செய்துவிட்டு திருவண்ணாமலைக்குச் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தார்.

அப்போது திருவண்ணாமலைக்குச் செல்லும் பேருந்து வந்தது. அதில் இடம் பிடிக்க ஏழுமலை, தங்க நகைகளை வைத்திருந்த பையைப் பேருந்தின் ஜன்னல் வழியாக இருக்கையில் போட்டிருக்கிறார். பின்னர் பேருந்தில் ஏறி வந்து பார்த்தபோது தங்க நகைகள் இருந்த பையைக் காணவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த ஏழுமலை, பையைப் பேருந்துக்குள் தேடினார். பின்னர் பை மாயமான தகவலை உரிமையாளர் விக்னேஷிடம் போனில் ஏழுமலை தெரிவித்தார்.
இதையடுத்து விக்னேஷ், உடனடியாக சென்னைக்கு வந்தார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து பேருந்து நிலையத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது ஏழுமலையை நீண்ட நேரமாக நோட்டமிட்டுக்கொண்டிருந்த ஒருவர், பேருந்திலிருந்து தங்க பையை எடுத்துக்கொண்டு பைக்கில் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து பைக்கின் பதிவு நம்பரைக்கொண்டு அந்த மர்ம நபர் குறித்த விவரங்களைச் சேகரித்த போலீஸார், அவரைப் பிடித்தனர். விசாரணையில் அவரின் பெயர் சந்திரசேகர் என்றும், நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 30.5 சவரன் தங்க நகைகளை போலீஸார் மீட்டனர். இந்தக் குற்றச் செயலுக்கு சந்திரசேகர் பயன்படுத்திய பைக்கையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு சந்திரசேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.