விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அருகேயுள்ள ஈச்சங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் சரத்குமார் - ராணி (பெண்ணின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்களுக்கு மேலாகும் நிலையில், ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த நிலையில், இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவன் - மனைவி இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக ராணி பணியாற்றி வந்திருக்கிறார். மனைவிமீதான சந்தேகத்தில், சரத்குமார் அண்மையில் ராணியிடம் சண்டையிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சரத்குமார். அவரைமீட்ட உறவினர்கள், காலை 11 மணியளவில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.
அப்போது சரத்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் தகவலறிந்து, ராணி அவரைப் பார்க்கச் சென்றிருந்தாராம். 'உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்' என்று ராணியை அழைத்துச் சென்ற சரத்குமார், தான் மறைத்துவைத்திருந்த கத்தியைக் கொண்டு ராணியை வெட்டியிருக்கிறார். கழுத்து, தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த ராணி, உடனடியாக மீட்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட சரத்குமாரைப் பிடித்த பொதுமக்கள், விக்கிரவாண்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவரைக் கைதுசெய்த போலீஸார், தங்களுடைய மேற்பார்வையில் சரத்குமாரை சிகிச்சைக்கு அனுமதித்திருக்கின்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குடும்பப் பிரச்னையின் காரணமாக, கணவனே மனைவியை மருத்துவமனையில் வைத்து வெட்டிய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.