கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் பெரிய நாடார் என்பவருக்குச் சொந்தமான செங்கல்சூளை இருக்கிறது. அங்கு மேற்கு வங்க மாநிலம், பேல்பூரைச் சேர்ந்த டெபுராய் (30) என்பவர் வேலை செய்துவந்தார். அவருடன் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த வசந்தி பகாடியா (29) என்ற பெண்ணும் அந்தச் செங்கல்சூளையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். வசந்தி பகாடியாவுக்கு வேறொருவருடன் திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கணவரைப் பிரிந்த வசந்தி பகாடியா, தன் குழந்தையுடன் டெபுராயுடன் சேர்ந்து வசித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று இரவு குடிபோதையிலிருந்த டெபுராய், வசந்தி பகாடியாவிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், வசந்தி பகாடியாவைக் கம்பால் சரமாரியாகத் தாக்கியதோடு மார்பு, தொடை எனப் பல்வேறு பகுதிகளில் கடித்துக் குதறியிருக்கிறார். இதனால் படுகாயமடைந்த வசந்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்கு பதிவுசெய்து டெபுராயைக் கைதுசெய்தனர். பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், வசந்தி பகாடியா மேற்கு வங்கத்திலிருந்து கஞ்சா எடுத்து வந்து ஆரல்வாய்மொழிப் பகுதியில் விற்பனையில் ஈடுபட்டதும், இதில் பணப் பரிமாற்றம் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்திருக்கிறது. பணப் பிரச்னை முற்றியதால், டெபுராய் இளம்பெண்ணை அடித்தும், கடித்தும் கொலைசெய்தது தெரியவந்திருக்கிறது.

மேலும், வசந்தி பகாடியா கஞ்சா விற்பனை சம்பந்தமாக சில போலீஸாருக்கு மாமூல் கொடுப்பதற்காக, பணத்தை டெபுராயிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பணத்தை டெபுராய் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுக்காமல் செலவு செய்துவிட்டாராம். அது தொடர்பான தகராறில்தான் இளம்பெண் கொலைசெய்யப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.