சென்னை, கிழக்கு தாம்பரம், அந்தோணி தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (53). இவர், சரக்கு வாகனம் ஓட்டிவருகிறார். கடந்த மாதம் 13-ம் தேதி குரோம்பேட்டை பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறார். மறுநாள் ஜெகதீசனின் வாகனம் திருட்டுப்போயிருந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த அவர், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது இரவில் அங்கு வரும் இருவர், சரக்கு வாகனத்தைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது குரோம்பேட்டை, இந்திரா நகர்ப் பகுதியைச் சேர்ந்த அருவின் (22), அவரின் கூட்டாளியான தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பார்வதி ராஜா (36) எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``கைதுசெய்யப்பட்ட பார்வதி ராஜா, திருடிய சரக்கு வாகனத்தை தஞ்சாவூரில் விற்றதாகத் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின்படி அந்த வாகனத்தை மீட்டிருக்கிறோம்.
தொடர்ந்து பார்வதி ராஜா, அவரின் நண்பர் அருவினிடம் விசாரித்தபோது, அவர்கள் குறிப்பிட்ட சரக்கு வாகனங்களைத் தொடர்ந்து திருடிவந்தது தெரியவந்தது. இதற்காக இருவரும் சேர்ந்து யூடியூபைப் பார்த்து மாஸ்டர் கீ (சாவி) ஒன்றை தயாரித்திருக்கிறார்கள். அதைக்கொண்டு மாதம் ஒரு சரக்கு வாகனம் என இந்த ஆண்டில் நான்கு மாதங்களில் நான்கு சரக்கு வாகனங்களைத் திருடியிருக்கிறார்கள். அவற்றைக் குறைந்த விலைக்கு வெளியூர்களில் விற்றுப் பணமாக்கியிருக்கிறார்கள். அந்தப் பணத்தை இருவரும் பங்கு பிரித்திருக்கிறார்கள்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் வாகனங்களை வாங்கி விற்பது (புரோக்கர்), ஏசி மெக்கானிக் வேலைகளைச் செய்வது என் வேலை செய்துவந்திருக்கிறார்கள். போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு ஒரு சரக்கு வாகனத்தைத் திருடி வந்திருக்கிறார்கள். அந்தப் பணத்தைக்கொண்டு மாதம் முழுவதும் செலவழித்திருக்கிறார்கள். இவர்களிடமிருந்து மீதமுள்ள மூன்று வாகனங்களை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றனர்.