சேலம் மாவட்டம், தாதுகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் தன்னுடைய இரண்டாவது மனைவியான பிரியாவுடன் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் வசித்துவந்தார். இந்த நிலையில், நேற்று இரவு நண்பர்களுடன் வெளியே சென்ற ரஞ்சித் குமார், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியிருக்கின்றனர். அப்போது உடையாபட்டி வேடியப்பன் கோயில் முன்புறமிருக்கும் பள்ளத்தில் சடலமாகக் கிடந்திருக்கிறார்.
இது குறித்து தகவலறிந்த அம்மாபேட்டை காவல் ஆய்வாளர், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். அப்போது ரஞ்சித் குமார் கழுத்தில் பீர் பாட்டிலால் குத்திய நிலையில், இறந்து கிடந்தார். இதையடுத்து, காவல்துறையினர் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

காவல்துறை விசாரணையில், இவர் வழிப்பறி வழக்கில் கைதாகி, கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்ததும், இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட ஏழு வழக்குகள் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. நேற்று இரவு நண்பர்களுடன் மது அருந்தச் சென்றிருக்கிறார். அப்போது அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியிருக்கின்றனர். மது அருந்திய சமயத்தில், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் ரஞ்சித் குமார் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது வழக்கில் முன்விரோதம் காரணமாக கொலைசெய்யப்பட்டாரா எனப் பல்வேறு கோணங்களில் விசாரித்துவருகின்றனர்.
மேலும் கொலைசெய்த மர்மநபர் குறித்தும், அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.