கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் தானூரை அடுத்துள்ள ஓட்டுப்புறம் தூவல் தீரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அட்லாண்டிக் என்ற ஈரடுக்கு படகு கவிழ்ந்து 15 குழந்தைகள் உள்பட 22 பேர் மரணம் அடைந்தனர். மாலை 5 மணிக்கு மேல் படகை இயக்கக்கூடாது என்ற விதியை மீறியும், லைசென்ஸ் இல்லாமலும் படகு இயக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. நாட்டை உலுக்கிய இந்த படகு விபத்து வழக்கில் படகின் உரிமையாளர் நாசர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

மேலும் விபத்தில் சிக்கிய படகின் மேலாளர் அனில், நாசரின் உதவியாளர்கள் பிலால், ஸ்யாம் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், படகு உரிமையாளர் நாசரை காப்பாற்ற முயன்ற அவரின் சகோதரர் ஸலாம்(53), சகோதரரின் மகன் வாஹித்(27), நாஸரின் நண்பர் முஹம்மது ஷாபி(37), படகை இயக்கிய தினேசன் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படகு விபத்தில் இறந்த சிவில் போலீஸ் அதிகாரியான ஸபருதீன் என்பவர் பணியின்போது இறந்ததாக மலப்புறம் எஸ்.பி தெரிவித்துள்ளார். போதை பொருள் கடத்தல்காரர்களை பிடிப்பதற்காக தூவல் தீரம் பகுதிக்குச் சென்ற ஸபருதீன், படகில் கண்காணித்ததாகவும், மறு கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் போதை பொருள் விற்பனை நடப்பதாக கிடைத்த தகவல் குறித்து விசாரிப்பதற்காகவும் அவர் படகில் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது போதைபொருள் கடத்தல்காரர் ஒருவரின் மொபைல் போன் லொக்கேஷன் தூவல் தீரம் பகுதியை காட்டியுள்ளது. அதனால் ஸபருதீன் தூவல் தீரம் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது பலர் படகில் ஏறியதால் ஸபருதீனும் படகில் ஏறி கீழ்பகுதியிலும், மேல் பகுதியிலும் தேடியுள்ளார். இதற்கு இடையே ஏற்பட்ட படகு விபத்தில் ஸபருதீன் மரணமடைந்திருப்பது போலீஸார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

படகு விபத்தில் இறந்த ஸபருதீன் பல வழக்குகளை திறமையாக துப்புதுலக்கியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். தானூர் காவல் நிலையம் முன்பு உள்ள பால் பூத் அருகே வைக்கப்பட்டிருந்த பைக் ஒன்று சமீபத்தில் திருட்டுபோனது. அதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி காவல் நிலையம் அருகே திருட்டு நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு போலீஸுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.
அப்போது முடிவெட்டுவதற்காக சென்றிருந்த ஸ்பருதீன், பைக் திருடனை பிடிக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என சபதம் எடுத்துவிட்டு முடி வெட்டாமலே திரும்ப வந்துள்ளார். கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொள்ளையன் மாஸ்க் அணிந்திருந்ததால் அவனை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதே சமயம் ஸபருதீன் அந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி 8 நாள்களில் குற்றவாளியை பிடித்துள்ளார். அப்படிப்பட்ட சிவில் போலீஸ் அதிகாரியை இழந்தது வருத்தத்தை ஏற்படுத்துவதாக சக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

படகு விபத்தில் இறந்த ஸபருதீன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். படிக்கும்போதே கட்டட வேலைக்குச் சென்று அந்த வருமானத்தில் படிப்பை முடித்துள்ளார். போலீஸ் ஆக வேண்டும் என கருத்துடன் படித்த அவர் சிவில் போலீஸ் அதிகாரியாக தேர்வானார். திறமையாக பணிபுரிந்தவர், மலப்புறம் எஸ்.பி ஸ்பெஷல் டீமில் இடம்பிடித்தார். போதைப்பொருள் கடத்தல் டீமை பிடிப்பதில் கைதேர்ந்தவராக மாறினார். படகு கவிழ்ந்தபோது படகின் அடிப்பகுதியில் சிக்கியதால் ஸபருதீனால் தப்பிக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.