திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கீரனூர் பேரூராட்சிக்குட்பட்ட கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிவந்தவர் வீரகாந்தி. கடந்த 2021-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் கீரனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் ஒருவருக்கு, காவல் ஆய்வாளர் வீரகாந்தி பாலியல்ரீதியான தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், வீரகாந்திமீது 2021-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்போதைய திண்டுக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பி லாவண்யா தலைமையிலான விசாகா கமிட்டி, பெண் காவலர் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தியது.
இதில் புகார் கொடுத்த பெண், காவல் நிலையத்தில் பணிபுரிந்த சக போலீஸார், குற்றச்சாட்டுக்குள்ளான ஆய்வாளர் வீரகாந்தி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து ஆய்வாளர் வீரகாந்தி ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பெண் காவலர் கொடுத்த ஆதாரம், காவல் ஆய்வாளர் வீரகாந்தியின் செல்போன் உரையாடல், குறுந்தகவல் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு, அப்போதைய ஏ.டி.எஸ்.பி லாவண்யா தலைமையிலான விசாகா கமிட்டி நடத்திய விசாரணையில் காவல் ஆய்வாளர் வீரகாந்திமீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டு உண்மை எனத் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பான அறிக்கையை விசாகா கமிட்டி அரசுக்கு அனுப்பிவைத்தது. இந்த நிலையில், தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டு உறுதி என விசாகா கமிட்டியின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.

அதனடிப்படையில், காவல் ஆய்வாளர் வீரகாந்தியைப் பணியிலிருந்து நிரந்தரமாக விடுவித்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி அபிநவ்குமார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்துவரும் நிலையில், காவல் ஆய்வாளர் வீரகாந்தியைப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.