இந்தியாவில் சிறைகளில் உள்ள கைதிகளின் மனநல பாதிப்பு எண்ணிக்கை, 22 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம், இந்தியாவிலுள்ள குற்ற வழக்குகள் குறித்த தரவுகளை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் `இந்திய சிறைச்சாலை புள்ளிவிவரங்கள்’ என்ற தலைப்பிலான அதன் சமீபத்திய அறிக்கையில், சிறைகளில் உள்ள கைதிகளில் 9,180 கைதிகள் மனநல பாதிப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை, நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மொத்த 5.54 லட்சம் கைதிகளில் 1.7 சதவிகிதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட 9,180 கைதிகளில் 41.3 சதவிகிதம் (3,787) பேர் குற்றவாளிகள், 58.4 சதவிகிதம் (5,365) பேர் விசாரணைக் கைதிகள் மற்றும் 0.3 சதவிகிதம் (23) பேர் தடுப்புக்காவலில் உள்ளவர்கள் என்று 2021-ம் ஆண்டின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சிறைச்சாலைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 2020-ம் ஆண்டில் 1,887 என்ற எண்ணிக்கையில் இருந்து 2021-ம் ஆண்டில் 2,116 என 12.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இயற்கையாக இறந்தவர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 1,642 என்ற எண்ணிக்கை, 2021-ம் ஆண்டில் 1,879 ஆக அதிகரித்துள்ளது, இது 14.4 சதவிகித அதிகரிப்பாகும்.
இயற்கையாக இறந்த 1,879 கைதிகளில் 1,796 பேர் நோய் காரணமாகவும், 83 பேர் வயது மூப்பு காரணமாகவும் இறந்துள்ளனர். நோயால் இறந்தவர்களில், 27.4 சதவிகித (493) கைதிகள், இதய நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்; 16.4 சதவிகிதம் (294) பேர் நுரையீரல் பாதித்து மரணமடைந் துள்ளனர்.
சிறைகளில் ஏற்படும் இயற்கைக்கு மாறான மரணங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், 2020-ம் ஆண்டில் 189 என்பது, 2.1% குறைந்து, 2021-ம் ஆண்டில் 185 ஆக இருந்தது. இந்த 185 இயற்கைக்கு மாறான மரணங்களில், தற்கொலையே முதன்மையாக இருந்துள்ளது; சக கைதிகளால் கொலை செய்யப்பட்டு 11 பேரும், விபத்தில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டில் நிகழ்ந்த இயற்கைக்கு மாறான 189 கைதிகளின் மரணங்களிலும், 156 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021-ம் ஆண்டில், இயற்கையான முறையில் சிறைக்கைதிகள் அதிகம் உயிரிழந்தது உத்தரப்பிரதேசத்தில் (439 பேர்) தான். இரண்டாமிடத்தில் பீகார் (173), அடுத்து மத்தியப் பிரதேசம் (151) ஆகியன உள்ளன. கைதிகளின் இயற்கைக்கு மாறான இறப்புகளிலும் உத்தரப்பிரதேசமே முதலிடத்தில் உள்ளது. அங்கு 42 கைதிகள் கடந்த ஆண்டு இறந்துள்ளனர். ஹரியானா மற்றும் மேற்கு வங்கம் ஆகியவற்றில் தலா 16 பேர்; டெல்லியில் 12 கைதிகள் இயற்கைக்கு மாறாக இறந்ததாக, தேசிய ஆவணக் காப்பகத் தரவுகள் தெரிவித்துள்ளன.