விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் காளையப்பன். இவருடைய மகன் கார்த்திக். 19 வயதான கார்த்திக், ராஜபாளையத்திலுள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 2-ம் ஆண்டு படித்துவந்தார். இந்த நிலையில், கார்த்திக்குக்கு நேற்று முன்தினம் இரவில் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் பதறிய உறவினர்கள், அவரை ராஜபாளையம் ரயில்வே கேட் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், முதற்கட்டமாக வயிற்றுவலிக்கு மருந்து பரிந்துரைத்திருக்கின்றனர். ஆனால், மீண்டும் கார்த்திக்குக்கு வயிற்றுவலி அதிகரித்திருக்கிறது. இதையொட்டி நேற்று அவர், அதே தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்குப் பலகட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன.

பரிசோதனையின் முடிவில், கார்த்திக்குக் குடல் இறக்கப் பிரச்னை இருப்பதாகவும், அதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்வதற்கு கார்த்திக் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அறுவை சிகிச்சையின் அவசியத்தைக் கூறி, மருத்துவமனை ஊழியர்கள் அவரைச் சமாதானப்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து, அருகேயுள்ள பரிசோதனை நிலையத்துக்குச் சகோதரியுடன் நடந்து சென்ற கார்த்திக், அங்கே எல்லாவிதமான சோதனைகளையும் செய்து முடித்துக்கொண்ட பின்னர், அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
அறுவை சிகிச்சை முடிந்து, வார்டுக்கு அழைத்துவரப்பட்ட பின்னரும் கார்த்திக் பேச்சு மூச்சின்றி இருந்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து அவரின் உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, அவசர அவசரமாக கார்த்திக்கை மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர். பிறகு, 30 நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்த மருத்துவர்கள், சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரின் இறப்புக்கான காரணம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டனர். அப்போது, மருத்துவமனை நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், முறையான அறுவை சிகிச்சை செய்யாமல் கார்த்திக்கைக் கொன்றுவிட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர்மீது குற்றச்சாட்டை முன்வைத்து மருத்துவமனை நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் கார்த்திக்கின் சகோதரி இளவரசி புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.