மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 29 - கைதி உடையில் கருணாநிதி!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

‘‘விடுவிப்பார்கள் என்று தோன்றவில்லை. போய்விடுவேன் என்று ரொம்ப சந்தோஷப்படாதீங்க’’

இரண்டாம் முறையாக சிறையில் கலைஞரைச் சந்திப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. முதல் சந்திப்பு நிகழ்ந்தது 1985-ம் ஆண்டு. பிறகு மீண்டும் 1986-ம் ஆண்டு ஒரு போராட்டத்தில் கைதாகி விசாரணைக் கைதியாக சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார் கலைஞர். கூடவே ஆயிரக்கணக்கான தொண்டர்களும்.

 ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை
ஜி.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

அன்றைய தினம், அந்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் கொடுக்கப்போகும் தீர்ப்பைத் தமிழ்நாடே ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தது. என்றும் இல்லாத குதூகலத்துடன் காணப்பட்டார் கலைஞர். மறியலில் சிறைப்பட்ட கைதிகள் அனைவரும் தாங்கள் விடுதலை ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு காவலர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டிருந் தார்கள். கலைஞரும் நீதிமன்றத் துக்குச் செல்லத் தயாரானார். வழிக்காவல் போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தேன். என்னிடம் ‘போய் வருகிறேன்’ என்று கூறினார்.

கடந்த முறை அவர் சிறையில் இருந்தபோதுதான் அவர்மீது எனக்கிருந்த கற்பிதங்கள் மறைந்து, அன்பும் மரியாதையும் உதயமாகின. இந்த முறை எங்களுக்குள் உணர்வுபூர்வமான நட்பு மலர்ந் திருந்தது. அவர் கிளம்புகிறார் என்றதும் என்னையும் அறியாமல் என் மனம் கனத்து, கண்களில் நீர் கோத்தது. அவரிடம், ‘‘நீங்கள் மீண்டும் சிறைக்கு வர வேண்டியிருக்காது. விடுதலை ஆகிவிட்டால் நீதிமன்ற வளாகத்திலிருந்தே வீட்டுக்குச் சென்றுவிடலாம்’’ என்றேன்.

ஜெயில்... மதில்... திகில்! - 29 - கைதி உடையில் கருணாநிதி!

அதற்கு அவர், ‘‘விடுவிப்பார்கள் என்று தோன்றவில்லை. போய்விடுவேன் என்று ரொம்ப சந்தோஷப்படாதீங்க’’ என்று அவருக்கே உரிய கிண்டல் தோரணையில் சொல்லிவிட்டு போலீஸ் வாகனத்தில் ஏறினார். சொன்னது போலவே இரண்டு மணி நேரத்தில் திரும்பி வந்தார். “சொன்னேன் அல்லவா, திரும்பி வந்துவிடுவேன் என்று... நான்கு மாத தண்டனை கொடுத்துவிட்டார்கள்!’ என்று அவர் சொன்னபோதும் முகத்தில் மலர்ச்சி கூடியிருந்தது.

இந்த முறை கலைஞருக்குத் தரப்பட்டது வெறும் காவல் தண்டனை இல்லை; கடுங்காவல் தண்டனை. கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள் சிறையில் கட்டாயம் வேலை செய்ய வேண்டும். கைதி உடையை அணிய வேண்டியது கட்டாயம்.

தீர்ப்புக்குப் பிறகு சிறைக்கு வந்த கலைஞர் என்னிடம், ‘‘கடுங்காவல் தண்டனை என்றால் என்ன... செக்கு இழுக்க வைப்பீர்களா?’’ என்று கேட்டார். ‘‘செக்கு இழுப்பதெல்லாம் பிரிட்டிஷார் காலத்துடன் போய்விட்டது. நீங்கள் கைதி உடை அணிய வேண்டும். கட்டாயம் வேலை செய்ய வேண்டும். சோப்பு தயாரித்தல், பைண்டிங், டேக் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் இந்தச் சிறையில் உள்ளன’’ என்று கூறினேன்.

‘‘உங்கள் அலுவலக உதவியாளராக என்னைப் போட்டுக்கொள்ளுங்கள்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார். நானும் விடாமல், ‘‘நீங்கள் சரியாக வேலை செய்யாவிட்டால் நான் ஏதாவது சொல்வேன். அதை மனதில் வைத்துக் கொண்டு, நாளை முதலமைச்சராக வந்தவுடன் தண்ணீர் இல்லாத காட்டுக்குத் தூக்கி அடிப்பீர்கள். அந்த வம்பே வேண்டாம். நீங்கள் பைண்டிங் தொழிற்கூடத்தில் வேலையைப் பாருங்கள்’’ என்று சிரித்தபடியே கூறிவிட்டு, ‘Labour alloted to binding section’ என்று அவரது வரலாற்று அட்டையில் எழுதினேன். உடனே அவருக்குக் கைதிச் சீருடை வழங்கப்பட்டது.

மாலை நேர்காணலுக்கு தன் மனைவி, மக்களைப் பார்க்க என் அறைக்கு வந்துவிட்டார். அவரை நிமிர்ந்து பார்த்த எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. காரணம், அவர் அணிந்திருந்த கைதிச் சீருடை. இங்கே இன்னொரு விஷயத்தையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். கலைஞர் தமிழக முதல்வரானதும்தான் கைதிகளின் சீருடையை மாற்ற உத்தரவிட்டார். அதுவரை கட்டம் போட்ட டிரவுசர், மேலாடையுடன் குல்லா அணிய வேண்டும். கலைஞர்தான் வெள்ளைச் சீருடையைப் பரிந்துரைத்து மாற்றி உத்தரவிட்டார். இப்போது அதே சீருடையில் என் முன்னால் அமர்ந்திருக்கிறார்.

வெளியே அவரைக் காண ஏகத்துக்கும் கூட்டம். கடுங்காவல் தண்டனை என்பதால், அனைவரும் உணர்ச்சிப் பிரவாகத்தில் இருந்தார்கள். சிலர் அழுகையுடன் காணப் பட்டார்கள். இதோ அவர்களைப் பார்க்கச் செல்கிறார் கலைஞர். அவரைப் பார்த்த அந்த சில நொடிகள் மட்டும் கனத்த மெளனம். அத்தனை பேரும் உறைந்து நின்றார்கள். சில நொடிகளில் அங்கே பேரிரைச்சல். ‘தலைவரே... உங்களுக்கா இந்த நிலைமை!’ என்று அனைவரும் கதறி, கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒருவழியாக திரும்பிவந்தார் அவர். அவரிடம் நான், ‘‘அண்ணே! எல்லாரும் ரொம்ப வருத்தப்படுறாங்க... உங்களுக்கு ஏ கிளாஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகும்போது கைதி உடை அணிந்தால் போதும். மற்ற நேரங்களிலும், பார்வை யாளர்களைப் பார்க்கும்போதும் கைதி உடை வேண்டாமே...’’ என்றேன்.

உடனே என்னைக் கூர்ந்து பார்த்தவர் மெல்லிய புன்னகையுடன், ‘‘இந்தக் கைதி உடையை நான் இன்று அணிந்ததற்கான காரணம் நாளைக் காலை உங்களுக்கு விளங்கும்’’ என்றார் பூடகமாக. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அடுத்த நாள் காலை அனைத்துப் பத்திரிகைகளிலும் பிரதான செய்தியே கலைஞர்தான். கைதி உடையுடன் அலுமினியத் தட்டு, குவளையைப் பிடித்துக்கொண்டு நிற்பதுபோன்ற புகைப்படம், ‘கைதி உடையில் கருணாநிதி!’ என்ற தலைப்பில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ந்துபோனேன்.

அவரைப் பார்த்து, ‘‘இந்தப் புகைப்படத்தை எனக்குத் தெரியாமல் எப்போது எடுத்தீர்கள்... புகைப்படம் எடுக்க உங்களுக்கு அனுமதி இல்லையே!’’ என்றேன். அதற்கு அவர், ‘‘இப்போது எடுக்கவில்லை. முரசொலி அலுவலகத்தில் போட்டோஷாப்பில் ஏற்கெனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பழைய புகைப்படம்’’ என்றார். ஒரு நிமிடம் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், தொலைபேசி அலறியது. அழைத்தது டி.ஜி.பி!

‘‘கருணாநிதிக்குக் கைதி உடை கொடுத்தீர்களா? முதலமைச்சர் கேட்கிறார்’’ என்று கேட்டார். ‘‘ஆம். கொடுத்தது உண்மைதான்’’ என்றேன். ‘‘யாரைக் கேட்டுக் கொடுத்தீர்கள்?’’ என்றார் கோபமாக. ‘‘கடுங்காவல் தண்டனை என்றால் சிறை விதிகளின்படி கைதி உடைதானே கொடுக்க வேண்டும்’’ என்றேன். அவர், ‘‘சட்டம் எனக்கும் தெரியும். முன்னாள் முதல்வருக்குக் கைதி உடையைக் கொடுக்கும்போது ஒரு வார்த்தை கேட்டுவிட்டுக் கொடுத்திருக்கலாமே...’’ என்றார்.

நானும் அவசரப்பட்டுவிட்டோமோ என்று வருத்தப்பட்டேன். டி.ஜி.பி-யை அழைத்துப் பேசியிருக்கிறார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ‘‘ஏன் அவருக்குக் கைதிச் சீருடையைக் கொடுத்தீர்கள்?’’ என்று கோபமாகக் கேட்டிருக்கிறார். காலையில் பேப்பரைப் பார்க்காத டி.ஜி.பி., ‘கருணாநிதிக்கு கைதிச் சீருடை தரப்படவில்லை!’ என்று கூறிவிட்டார்.

ஜெயில்... மதில்... திகில்! - 29 - கைதி உடையில் கருணாநிதி!

திரும்பவும் டி.ஜி.பி என்னை அழைத்து, ‘‘அவருக்குக் கொடுக்கப்பட்ட கைதிச் சீருடையைத் திரும்பப் பெறுங்கள்’’ எனக் கட்டளையிட்டார். நானும் கலைஞரிடம் சென்று, கைதி சீருடையைத் திரும்பக் கேட்டேன். ‘‘அதெல்லாம் கொடுக்க முடியாது. நான் அதை திருப்பிக் கொடுத்துவிட்டால் பத்திரிகைகள் பொய் கூறியதுபோல் ஆகாதா... முடியாது!’’ என்று மறுத்துவிட்டார்.

இதற்கிடையில் உளவுப்பிரிவினர் விசாரித்து, ‘‘கோர்ட்டிலிருந்து சிறைக்குச் சென்றதும் நேற்று மாலையே கருணாநிதிக்கு கைதிச் சீருடை கொடுக்கப்பட்டுவிட்டது’’ என்று முதல்வருக்கு ரிப்போர்ட் போட்டுவிட்டனர். டி.ஜி.பி-யை அழைத்த முதல்வர் எம்.ஜி.ஆர், ‘சிறைக்குப்போய் நேரில் பார்த்து வாருங்கள்’ என்று சொல்லி விட்டார். டி.ஜி.பி என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘‘நான் காலை 10 மணிக்கு அங்கு வருகிறேன். அப்போது கலைஞர் கைதிச் சீருடையில் இருக்கக் கூடாது’’ என்று கட்டளையிட்டார்.

நான் கலைஞரிடம் சென்று, ‘‘நீங்கள் கைதிச் சீருடையில் இருந்தால் என் வேலைக்கு ஆபத்து!’’ என்று தயக்கத்துடன் எடுத்துச் சொன்னேன். என்னைக் கனிவாகப் பார்த்தவர், ‘‘உங்களுக்கு ஒரு தீங்கு வருமென்றால், அதனால் கிடைக்கும் எந்தப் பயனும் எனக்குத் தேவையில்லை’’ என்று கூறி கைதிச் சீருடைகளைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.

கைதி உடையில் கருணாநிதியைப் பார்த்து மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே எம்.ஜி.ஆர் இப்படிச் செய்தார் என்று பலரும் பேசினார்கள். உண்மையில் தன் நண்பரை அந்த உடையில் பார்க்க அவர் விரும்பவில்லை என்பது அவருக்கு நெருக்கமானவர் களுக்கு மட்டும் தெரிந்திருந்தது. கடுங்காவல் தண்டனையால்தான் கைதி உடை என்பதை அறிந்த எம்.ஜி.ஆர்., தனது முதலமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தி ‘கருணாநிதி உள்ளிட்ட அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்து சிறைக்கு வெளியே அனுப்பிவிட வேண்டும்’ என ஆணை பிறப்பித்தார்.

ஆணையைக் கலைஞரிடம் வாசித்தேன். சிரித்துக்கொண்டே, ‘‘நேற்று நான் கைதிச் சீருடை அணிந்து பார்வையாளர்களைச் சந்திக்க வந்தது ஏனென்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்குமே!’’ என்றார். ‘‘உங்கள் அரசியல் திருவிளையாடல்கள் எங்களுக்குப் புரியாது. நீங்கள் சீக்கிரம் புறப்படுங்கள்’’ என்றேன். ‘‘என்ன... ரொம்ப அவசரப்படுத்துகிறாய். சட்டப்படி சிறையில் எனக்கு இன்று மதியச் சாப்பாடு உண்டு. மதியம் சாப்பிட்டுவிட்டுதான் செல்வேன்’’ என்று தாமதப்படுத்தினார்.

வேறு வழியின்றி மற்ற சிறைவாசிகளை முதலில் விடுதலை செய்தேன். கலைஞர் விடுதலையாகும்போது அலைகடலாய் வெளியே தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

இதே கலைஞர்தான், இதே மத்தியச் சிறைக்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்... அப்போது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. என்ன நடந்தது?

(கதவுகள் திறக்கும்)