
தனியாக இருந்த இரண்டு பெண்கள் அடுத்தடுத்து கொலைசெய்யப்பட்டதையடுத்து, இது ‘சைக்கோ கொலையாளி’யின் அட்டூழியமாக இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டது.
உடுமலையில், அடுத்தடுத்து இரண்டு பெண்கள் கொடூரக் கொலைசெய்யப்பட்ட நிலையில், ‘சைக்கோ கொலைகாரன்’ ஒருவனை போலீஸ் கைதுசெய்திருக்கிறது!
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள சீலக்காம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி நாகவேணி. கடந்த 29-11-2022 அன்று வழக்கம்போல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மாடுகளை மேய்க்க அருகிலுள்ள விவசாய நிலத்துக்குச் சென்றிருக்கிறார் நாகவேணி. மாலை நீண்ட நேரமாகியும் நாகவேணி வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த ராஜேந்திரன் அந்தப் பகுதி முழுவதும் தேடிப் பார்த்தபோது, முட்புதருக்குள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார் நாகவேணி.

இதையடுத்து நாகவேணியின் உறவினர்களிடமும், சீலக்காம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள தென்னை நார்த் தொழிற்சாலைகளில் வேலை பார்த்துவரும் வடமாநிலத் தொழிலாளர்களிடமும், குடிமங்கலம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த நிலையில், நாகவேணி கொலைசெய்யப்பட்ட அடுத்த மூன்றாவது நாளில் (டிச.2) சீலக்காம்பட்டியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புக்குளம் பேருந்து நிறுத்தத்தில் படுத்திருந்த தனலட்சுமி என்ற பெண்மணி தலையில் கல்லைப்போட்டுக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
தனியாக இருந்த இரண்டு பெண்கள் அடுத்தடுத்து கொலைசெய்யப்பட்டதையடுத்து, இது ‘சைக்கோ கொலையாளி’யின் அட்டூழியமாக இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில், நாகவேணி, தனலட்சுமி கொலையைத் துப்பறிய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், தனலட்சுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொன்ற சைக்கோ கொலையாளியை 5-12-2022 அன்று போலீஸ் கைதுசெய்திருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், ‘‘புக்குளத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலைசெய்யப் பட்ட வழக்கில், உடுமலை ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த பெயின்ட்டர் ஆரோக்கியதாஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிசிடிவி காட்சிப்பதிவு, செல்போன் சிக்னல்களை வைத்து ஆரோக்கியதாஸைக் கைதுசெய்திருக் கிறோம். சைக்கோ மனநிலைகொண்ட இவர்மீது, ஏற்கெனவே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏரிப்பாளையம் லட்சுமி நகர் மூதாட்டி கொலைசெய்யப்பட்ட வழக்கு, மேட்டுப் பாளையம் ரயிலில் சங்கிலி பறித்த வழக்கு ஆகியவை இருக்கின்றன.
நாகவேணி கொலை நடைபெற்ற இடம் ஆள் அரவமற்ற பகுதி என்பதால், கடைசியாக அவரைப் பார்த்தவர்களிடமும், அந்தப் பகுதியிலுள்ள டவரில் பதிவான செல்போன் எண்களை வைத்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது. நாகவேணி அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்ததுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில், கொலையாளியைப் பிடித்துவிடுவோம்’’ என்றனர்.