விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த சிலருக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் புதுவையிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், கள்ளச்சாராயம் குடித்த அதே கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர், புதுவை, மரக்காணம், முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் அடுத்தடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், காவல்துறையைக் கண்டித்தும், நிவாரணம் வழங்கக் கோரியும், கள்ளச்சாராயம் விற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இ.சி.ஆர் சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பொதுமக்கள்.
இந்தச் சம்பவம் பூதாகரமான நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்தனர். அதையடுத்து மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், `உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்' என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்கிடையே விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், பொன்முடி; அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரடியாகச் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜமூர்த்தி (60) உயிரிழந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்திருக்கிறது.