புதுக்கோட்டை மாவட்டம், அரசர்குளம் கீழ்பாதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (30). இவர் கீரமங்கலம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்துவந்தார். இவருக்கும், வடகாட்டைச் சேர்ந்த அபீனா என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருணம் நடைபெற்றிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அபீனாவை வடகாட்டிலுள்ள அவரின் அம்மா வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.
இந்த நிலையில், வழக்கம்போல் பணிக்குச் சென்றவர் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். இதற்கிடையே, அபீனா, தமிழ்ச்செல்வனை செல்போனில் பலமுறை தொடர்புகொண்டிருக்கிறார். ஆனாலும், அவர் அழைப்பை எடுக்கவில்லை, ஆகவே இது பற்றி தமிழ்ச்செல்வனின் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார் அபீனா. உடனே, பதறியடித்துக்கொண்டு போய், தமிழ்ச்செல்வனின் அறைக் கதவை திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது, தமிழ்ச்செல்வன் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கிக் கிடந்திருக்கிறார்.

உடனே, அவரை மீட்ட உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தமிழ்ச்செல்வன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அறந்தாங்கி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தமிழ்ச்செல்வன் மதுவில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அதோடு, தமிழ்ச்செல்வன் அறையிலிருந்து ஒரு கடிதம் சிக்கியது.

அந்தக் கடிதத்தில், ``எனக்கு வாழபிடிக்கவில்லை. மிகுந்த மன வேதனையுடனும், மன அழுத்தத்துடனும் இருப்பதால், அனைவரையும் விட்டுப் பிரிந்து செல்கிறேன். என்னுடைய மரணத்துக்கு நானே காரணம். வேறு யாரும் காரணம் இல்லை" என்று எழுதப்பட்டிருந்தது.
காவலரின் சகோதரர் வெளிநாடு செல்வதற்காகப் பணம் கடனாக வாங்கியிருப்பதாகவும் அதில் கடன் சுமை இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்கொலைக்குக் கடன் பிரச்னைதான் காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து அறந்தாங்கி போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். காவலர் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலைசெய்துகொண்டிருக்கும் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.