விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து அண்மையில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாராயத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையில், போடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி வந்த நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

போடி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் மலையடிவாரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படை போலீஸார் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். அதில் அங்குள்ள ஒரு குடிசை வீட்டில் வைத்து கருப்பையா (55) என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து அவர் காய்ச்சி வைத்திருந்த 3.5 லிட்டர் கள்ளச்சாராயத்தையும், மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குப் போடப்பட்டிருந்த 20 லிட்டர் ஊறலையும் அழித்தனர்.
மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸார், கருப்பையாவைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போடி தாலுகா போலீஸார், கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையே, தேனி கலெக்டர் ஷஜீவனா மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்களைக் கண்டறிந்து சீல் வைக்கும்படி உத்தரவிட்டார். அதனடிப்படையில் வருவாய்த்துறை, டாஸ்மாக் நிர்வாகம், போலீஸார் இணைந்த சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளை ஒட்டி செயல்படும் பார்களை ஆய்வுசெய்தனர். கடந்த இரண்டு நாள்கள் நடத்தப்பட்ட ஆய்வில் அனுமதியின்றி செயல்பட்ட 77 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

``பல மாதங்களாகவும், ஆண்டுக்கணக்காகவும் அனுமதியின்றி பார்கள் நடத்தப்பட்டு வந்தது எப்படி... அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா... கண்டும் காணாமல் இருந்து வந்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?" என தேனியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.