வேலூர், தொரப்பாடியைச் சேர்ந்தவர் முகிலன் (32). வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இவரின் பைக்குக்கு திருவண்ணாமலை போக்குவரத்து போலீஸார் 1,000 ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இது பற்றி முகிலன் பேசுகையில், ‘‘நான், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பைக்கில் சென்றே ஓராண்டுக்குமேல் ஆகிறது. அதிலும், என் வீட்டிலேயே நிறுத்தப்பட்டிருந்த பைக்குக்கு நள்ளிரவில் அபராதம் விதித்தது எப்படி, டார்கெட்டை முடிப்பதற்காக ரேண்டமாக நம்பரை தேர்வுசெய்து அபராதம் விதித்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அபராதம் விதித்ததாக செல்போனுக்கு நள்ளிரவு 11:33 மணிக்கு மெசேஜ் வந்திருக்கிறது. அந்த நேரத்தில், நான் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கிறேன். பைக்கும் வீட்டுக்குள்தான் நின்றுகொண்டிருக்கிறது. ‘நாளொன்றுக்கு இத்தனை வண்டிகளைப் பிடிக்க வேண்டும். இவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும்’ என்ற நடைமுறையை போலீஸார் பின்பற்றுகிறார்கள்.
மாதக் கடைசி என்பதால், எங்கேயோ ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு மனதில் தோன்றிய ‘ரேண்டம்’ எண்களுக்கு அபராதம் போடுகிறார்கள். எனக்கும் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள். இதற்கு, திருவண்ணாமலை போக்குவரத்து போலீஸார் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும்’’ என்றார்.

இது தொடர்பாக, வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமியிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘ரேண்டமாக ஏதாவது பதிவெண் போட்டு அபராதம் விதிக்க முடியாது. அப்படி போலீஸாரும் செய்ய மாட்டார்கள். பைக்கும், அதன் உரிமையாளரும் வேலூரில் இருக்கிறார்கள், ஆனால், அபராதம் திருவண்ணாமலை போக்குவரத்து போலீஸாரால் போடப்பட்டிருக்கிறதென்றால், குற்றப் பின்னணியுடைய நபர்கள் யாரேனும் தங்களது வாகனங்களில், அதே பதிவெண்ணை போலியாகப் போட்டுக்கொண்டு சென்றிருக்கலாம். அவர்கள் போக்குவரத்து விதிகளை மீறியிருக்கலாம். இதனால், போலீஸார் அபராதம் விதித்திருக்கலாம். போலி பதிவெண் வாகனங்கள் நிறைய சிக்குகின்றன. அப்படி ஏதாவது இருக்குமே தவிர வேண்டுமென்றே அபராதம் விதிக்கப்பட்டிருக்க மாட்டாது. இது பற்றி விசாரிக்கிறேன்’’ என்றார்.