வரதட்சணையாக ஃபார்ச்சூனர் கார் கொடுக்காமல் வேறு கார் கொடுத்ததால் அரசுக் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் தன்னுடைய திருமணத்தை நிறுத்தியிருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் சித்தார்த் விஹார். இவர் அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிவருகிறார். இவருக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மணமகனுக்கு வரதட்சணையாக அக்டோபர் 10, 2022 அன்று, பெண்ணின் குடும்பத்தினர் வேகன்ஆர் காரை முன்பதிவு செய்திருக்கின்றனர்.

இதற்கிடையில், திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே சித்தார்த் விஹார் வரதட்சணையாக ஃபார்ச்சூனர் காரைக் கேட்டிருக்கிறார். ஆனால், மணமகள் குடும்பத்தினர், ஏற்கெனவே கார் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், அதை மாற்றக்கூடிய சூழல் இப்போது இல்லை எனவும் மறுத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, விரிவுரையாளர் சித்தார்த் விஹார் திருமணத்தை நிறுத்தப்போவதாக மணப்பெண்ணின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். இதையடுத்து, அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டினர், திருமணத்தை நிறுத்திய மணமகன்மீது காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.

காவல்துறை அரசுக் கல்லூரி விரிவுரையாளர்மீது ஐபிசி பிரிவு 506 (கிரிமினல் மிரட்டல்) மற்றும் வரதட்சணைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறது.
இதற்கு முன்னதாக உத்தரப்பிரதேசத்தின் எட்டாவாவில், மணமகள் திருமணத்தன்று மாலை மாற்றிக்கொள்ளும்போது மணமகன் கறுப்பாக இருப்பதாகக் கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் பேசுபொருளானது. வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் சொல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.